தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வருவாய்த் துறை பணியிடங்கள் நிரப்பப்படுமா?

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளதால் பணியாளர்கள் கூடுதல் பணிச் சுமைக்கு உள்ளாகி வருகின்றனர்.  கடந்த 1996-2001 வரையிலான திமுக ஆட்சிக் கா

News image
Updated On :28 டிசம்பர் 2023, 1:54 pm

கு. வைத்திலிங்கம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளதால் பணியாளர்கள் கூடுதல் பணிச் சுமைக்கு உள்ளாகி வருகின்றனர்.

 கடந்த 1996-2001 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் 2000 டிசம்பர் 29 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து, அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சியில் அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.

 அரியலூர் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக, 2006-ல் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு, 2007 நவம்பர் 19-ல் அரியலூரை மீண்டும் தனி மாவட்டமாக்கியது. இதன்படி, 2007 நவம்பர் 23 முதல் அரியலூர் மாவட்டம் மீண்டும் உதயமானது. பல்வேறு அலுவலகங்கள் அரியலூரில் அமைக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.

 அரசுத் துறைகள் பல இருந்தாலும் அரசால் அறிவிக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பை வருவாய்த் துறையினர்தான் மேற்கொண்டு வருகின்றனர்.

 இயற்கை இடர்பாடுகள், தேர்தல், சட்டம் ஒழுங்குப் பிரச்னை, முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்குதல் போன்ற பணிகளுடன், தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான ஒருமுறை வரன்முறை செய்து பட்டா வழங்கும் திட்டம், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம், எரிவாயு இணைப்புடன் கூடிய சமையல் காஸ் அடுப்பு வழங்கும் திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டம் போன்ற பணிகளையும் வருவாய்த் துறையினர்தான் கூடுதலாக மேற்கொண்டு வருகின்றனர்.

 ஆனால், ஏற்கெனவே ஒப்பளிக்கப்பட்ட பணியாளர்களில் சுமார் 50 சதப் பணியாளர்களை மட்டும் கொண்டு பணி செய்ய வேண்டிய நிலை உள்ளதால், தாங்கள் மிகுந்த பணிச்சுமைக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் வருவாய்த் துறைப் பணியாளர்கள்.

 உதாரணமாக, அரியலூர் மாவட்டத்தில் உதவியாளர் நிலையில் 85 பணியிடங்கள் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டது. ஆனால், இப்போது 45 உதவியாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதேபோல, ஒப்பளிப்பு அளிக்கப்பட்ட 30 இளநிலை உதவியாளர் பணியிடங்களில் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோன்று, வருவாய்த் துறையின் பல நிலைகளில் மேலும் பல பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமிக்கப்படாமல் காலியாக உள்ளன. இதனால் மூவர் செய்ய வேண்டிய வேலையை ஒருவரே செய்து கொண்டிருக்கிறோம் என்கின்றனர் வருவாய்த் துறை பணியாளர்கள்.

 அரசு நலத் திட்டங்கள் மக்களிடம் காலத்தோடு சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தும் அரசு, காலிப் பணியிடங்களை நிரப்புவதிலும் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் வருவாய்த் துறையினர் வலியுறுத்துகின்றனர்.

 அரியலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடம்தான் உள்ளது. அரியலூர், செந்துறை வட்ட வழங்கல் அலுவலகங்களில் வட்ட வழங்கல் அலுவலரைத் தவிர, வேறு பணியிடம் இல்லை. உடையார்பாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் வழங்கல் அலுவலர், இளநிலை உதவியாளர் நிலையில் தனி வருவாய் அலுவலர் பணியிடம் மட்டும்தான் உள்ளது.

 அரியலூர் மாவட்டத்தில் 2.06 லட்சம் குடும்ப அட்டைகளும், 406 நியாய விலைக் கடைகளும் உள்ள நிலையில், இவற்றிக்கான உணவுப்பொருள் ஒதுக்கீடு, நியாய விலைக் கடைகள் தணிக்கை, அரசுக்கு அறிக்கை அனுப்புதல் போன்ற பணிகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்ய வேண்டிய நிலை. ஆனால், குறைவான பணியாளர்களைக் கொண்டு, குறிப்பிட்ட காலத்துக்குள்ளாக இந்தப் பணிகளை செய்வது எப்படி என்று தெரியவில்லை என்கின்றனர் வருவாய்த் துறைப் பணியாளர்கள்.

 உணவுப் பொருள் வழங்கல் பிரிவின் செயல்பாடுகள் ஏழை மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால் மற்ற மாவட்டங்களில் உள்ளதுபோல, கூடுதல் பணியிடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வருவாய்த் துறை பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், தேவையான இடங்களில் கூடுதல் பணியாளர்களை நியமிப்பதிலும் அரசு முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே அரசின் நலத் திட்டங்கள் முழுமையாகவும், காலத்தோடும் உரியவர்களுக்கு சென்று சேரும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.