தினமும் 3 மணி நேரம் வீடுகளுக்கு மின் தடை
சென்னையைத் தவிர தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகளுக்கு தினசரி மூன்று மணி நேரம் மின் தடை செய்யப்படும்.


சேலம், மார்ச் 28: தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் மின் வெட்டு நேரத்தை அதிகரிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி சென்னையைத் தவிர தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகளுக்கு தினசரி மூன்று மணி நேரம் மின் தடை செய்யப்படும்.
விவசாய பம்ப்செட்டுகளுக்கு பகலில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மட்டுமே இனி மின் விநியோகம் செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. கடலூரில் விவசாய பம்ப்செட்டுகளுக்கான மின்சாரம் கடந்த இரண்டு தினங்களாக 5 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நாளொன்றுக்கு அதிகபட்சம் 11 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. மின் உற்பத்தியோ 8 ஆயிரம் மெகா வாட்டாகவே உள்ளது. இதனால் நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரம் மெகா வாட் வரை மின் பற்றாக்குறை உள்ளது.
மேலும் மேட்டூர், வடசென்னை அனல் மின் நிலையப் பிரிவுகளில் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் பற்றாக்குறை அதிகரிப்புக்குக் காரணம்.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை ஈடுசெய்வதற்காக சென்னையைத் தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தினசரி மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மின் பற்றாக்குறை மிக அதிகமாக இருந்ததால் தமிழகத்தில் கிராமப்புறங்களில் மூன்று மணி நேரமும், நகர்ப்புறங்களில் இரண்டு மணி நேரமும் சுழற்சி முறையில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வந்தது.
இதையடுத்து பருவக் காற்று, மழை பெய்ததை அடுத்து நிலைமை சற்று சீரானது. இருப்பினும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கோடைக் காலம் தொடங்கியதை அடுத்து ஏ.சி., மின் விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகமானது. அதே சமயம் கோடைக் காலம் என்பதால்
காற்றாலை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் நிலக்கரி கையாளுவதில் ஏற்பட்ட
குளறுபடியால் மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு சென்னைக்குப் பதிலாக தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி கொண்டு வரப்பட்டு முழு உற்பத்தி அளவான 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு யூனிட்டில் பழுது ஏற்பட்டதை அடுத்து மேட்டூரில் மின் உற்பத்தி 630 மெகா வாட்டாகக் குறைந்தது. இதேபோன்று வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் பழுதடைந்துள்ளது.
இதனால் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நெய்வேலியில் மூன்று யூனிட்டுகள் பழுதடைந்து செயல்படாத நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சுமார் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மின் உற்பத்தி நிலையங்களின் திடீர் பிரச்னையால் தமிழகத்தில் பெரிய அளவில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை ஈடு செய்வதற்காக மாநிலம் முழுவதும் மின் தடை நேரத்தை மூன்று மணி நேரமாக அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. சில மாவட்டங்களில் இது ஞாயிற்றுக்கிழமையே அமலுக்கு வந்துவிட்டது.
இது குறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
தமிழகத்தின் தினசரி மின் தேவை 9 ஆயிரம் மெகா வாட்டில் இருந்து 10 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்து இருந்தது. கோடைக் காலம் என்பதால் மின் தேவை மேலும் உயர்ந்துள்ளது. இப்போது நாளொன்றுக்கு அதிகபட்சம் 11 ஆயிரம் மெகா வாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது.
விலைக்கு வாங்கி மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், சென்னையைத் தவிர மற்ற இடங்களுக்கு மின் தடை கால அளவு 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை குறைந்தபட்சம் ஏப்ரல் இரண்டாவது வாரம் வரையிலும் நீடிக்கும். இருப்பினும் கோடை மழை மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் சீரான உற்பத்தி நிலையை அடைவதைப் பொருத்தே மின் தடை நேரம் குறையும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...