நிலங்களை பொன்விளையும் பூமியாக மாற்றும் மண்புழு உரம்
ராமநாதபுரம்: விளைநிலங்களை பொன் விளையும் பூமியாக மாற்றும் வல்லமை மண்புழு உரத்துக்கு உண்டு. தற்போது மண்புழு உரக்கூடம் அமைப்பது, தயாரிப்பது போன்றவை மிகவும் எளிது என்பதாலும் இதன் பயன்களைப் புரிந்து கொண


ராமநாதபுரம்: விளைநிலங்களை பொன் விளையும் பூமியாக மாற்றும் வல்லமை மண்புழு உரத்துக்கு உண்டு.
தற்போது மண்புழு உரக்கூடம் அமைப்பது, தயாரிப்பது போன்றவை மிகவும் எளிது என்பதாலும் இதன் பயன்களைப் புரிந்து கொண்டதாலும் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வேளாண்மைத் துறை மண்புழு உரக்கூடம் அமைக்க 50 சதம் மானியம் வழங்குவதையும் விவசாயிகள் தெரிந்து கொள்ள
வேண்டும்.
விவசாயிகள் தங்கள் வயல்களிலும், தோட்டங்களிலும் கூட நீர்த்தேங்காத மேட்டுப் பகுதியில் மண்புழு உரக்கூடத்தை அமைத்துக் கொள்ளலாம். 50-க்கு 20 என்ற அளவில் 1000 சதுர அடி பரப்பில் வெப்பம் குறைவாக இருக்கும் வகையில் கீற்றுக்கொட்டகை அமைப்பது நல்லது. இதில் 20-க்கு 20 அளவில் 2 அடி உயரத்தில் 800 கன அடி
அளவுக்கு தொட்டி கட்டி அதனை நான்காகப் பிரித்துக் கொண்டால் உரக்கூடம் தயாராகி விடும். ஒரு உரக்கூடம் அமைக்க ரூ.60 ஆயிரம் என்றால் வேளாண் துறை ரூ.30 ஆயிரத்தை மானியமாக வழங்கி விடுகிறது. சிக்கன முறையிலும், சிறிய முதலீட்டிலும் மண்புழு உரங்கள் உற்பத்தி செய்வது இன்று பிரபலமடைந்து, பெருகி வருகிறது.
இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம். மண்ணின் மேற்பரப்பில் வாழும் மேல்மட்ட மண்புழு, நடுப்பகுதியில் மட்டுமே வாழ்பவை நடுமட்ட மண்புழு,அடியில் ஆழத்தில் படுக்கை வாக்கில் துளையிட்டு செல்பவை கீழ்மட்ட மண்புழு என வகைப்படுத்தப்படுகிறது.
முதலில் தொட்டியின் அடியில் செங்கல் அல்லது கூழாங்கற்களை பரப்பி அதற்கு மேல் மணலை பரப்பி பின்னர் பண்ணைக் கழிவுகளை நிரப்ப வேண்டும். மக்காத குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன் இடையிடையே தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 200 மண்புழுக்கள் என்ற அளவில் இட்டால் 3-வது வாரத்திலேயே மண்புழுக்கள் தங்கள் எச்சத்தை கழிவுகளாக மேற்பரப்பில் வெளித்தள்ளுகின்றன. வாரம் ஒருமுறைகூட இவற்றை சேகரிக்கலாம்.
இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது.
45 முதல் 60 நாளில் மண்புழு உரம் ரெடி. பண்ணையில் சேரும் கழிவுகளை அடுத்ததடுத்த தொட்டிகளில் நிரப்பி சேகரித்து பயிர்களுக்கு இடலாம்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ந.சத்தியமூர்த்தி கூறியது:
தீமை தரும் புழு, பூச்சிகள், வண்டுப் புழுக்கள், கிருமிகள் இல்லாமல் இருப்பது மண்புழு உரம். களை விதைகள் உயிருடன் இல்லாமலும் சத்துக்கள் செரிவூட்டப்பட்டதாகவும் உடனடியாக செடிகளுக்குக் கிடைக்கும் வகையில் நன்மைகள் இருப்பது, சுற்றுச்சுழலைப் பாதுகாப்பது இப்படியாக இவற்றின்
பலன்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். தற்போது வியாபார ரீதியாகவும் மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்கின்றனர். பயிர் இல்லாத காலங்களில் விவசாயிகளுக்கு உபரி வருமானமாகவும் மண்புழு உரம் தயாரிப்பது அமையும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 154 மண்புழு உரக்கூடங்களை அமைத்திருக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...