இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிகழ் நிதியாண்டில் 36 சமத்துவபுரங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு சமத்துவபுரமாக தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம் ஆதிநாதபுரம் ஊராட்சியில் 100 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆதிநாதபுரத்தில் உள்ள மாட்டுத்தாவணியில் 9.96 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த சமத்துவபுரத்தின் கட்டுமான பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. வீடுகள் அனைத்தும் ஓராண்டு காலத்தில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு 2011 மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே பணிகளை முடித்து திறப்பு விழாவை நடத்திவிட வேண்டும் என ஆளுங்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.