டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கல்லாற்றுப் பால கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வி. களத்தூர் கல்லாற்றில் கட்டப்படும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.   பெரம்பலூர் மாவட்டத்தி

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:34 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வி. களத்தூர் கல்லாற்றில் கட்டப்படும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  பெரம்பலூர் மாவட்டத்தில் 2006-ல் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக வி. களத்தூர் கல்லாற்றுப் பாலம் உடைந்தது. இதனால், வண்ணாரம்பூண்டி, இனாம் அகரம், திருவாளந்துறை, மரவநத்தம்,  பசும்பலூர், பிம்பலூர், பெருநிலா, சிறுநிலா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

  இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி பாதிப்படைந்தனர். இதையறிந்த மாவட்ட  நிர்வாகம் பாலம் உடைந்த பகுதியை தாற்காலிகமாகச் சீரமைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியது.

  இந் நிலையில், 2007-ல் பெய்த பலத்த மழையால், சீரமைக்கப்பட்ட பாலம் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதோடு, கல்லாற்றுப் பாலம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் போக்குவரத்து வசதியின்றி பாதிக்கப்பட்டனர்.

   வண்ணாரம்பூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அரசு  மேல்நிலைப் பள்ளி இருப்பதால், மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல்  அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதே கிராமத்தில் காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளதால், பொதுமக்களும், நோயாளிகளும் அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாமல் சுமார் 30 கி.மீட்டர் தொலைவுக்கு சுற்றிச் செல்லும் சூழ்நிலை உள்ளது.

  இதனால், பாதிக்கப்பட்ட அந்தப் பகுதி கிராம மக்கள் கல்லாற்றுப் பாலத்தை உடனடியாக கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர், மத்திய, மாநில அமைச்சர்களிடம் மனு அளித்தனர்.

  ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்தப் பகுதியில் நடைபெற இருந்த அரசு விழாக்களைப் புறக்கணித்து, கடை அடைப்பு, வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

  மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் விவசாய சங்கத் தலைவர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

  இந் நிலையில், கல்லாற்றுப் பால கட்டுமானப் பணிக்கு ரூ. 3 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 19.10.2009 அன்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா அடிக்கல் நாட்டினார். ஓராண்டுக்குள் பாலம் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார் அவர்.

   ஆனால், கட்டுமானப் பணிகள்  தொடங்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் நிறைவடையவில்லை.

   நெடுஞ்சாலைத் துறையினர் கட்டுமானப் பணிகளில் அலட்சியம் காட்டுவதால், பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

   இதனால், அண்மையில் பெய்த தொடர் மழையால் தாற்காலிகமாக போடப்பட்டிருந்த தரைப் பாலம், மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, கடந்த 10  நாள்களுக்கும் மேலாக போக்குவரத்து வசதியின்றி பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் தற்போது கல்லாற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் இயல்பு  நிலைக்குத் திரும்பியுள்ளனர்.

  எனவே, இனிவரும் மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க, நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.