/

முடங்கிப்போன முன்னோடித் திட்டம்

பொள்ளாச்சி : சான்றிதழ்களுக்காக விண்ணப்பிப்போரைத் தேடி வருவாய்த்துறையினர் செல்லும் முன்னோடித் திட்டம் முடங்கிப்போயுள்ளது.  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இத் திட்டத்தை துவக்கி

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:19 pm

ஆர். வேல்முருகன்

பொள்ளாச்சி : சான்றிதழ்களுக்காக விண்ணப்பிப்போரைத் தேடி வருவாய்த்துறையினர் செல்லும் முன்னோடித் திட்டம் முடங்கிப்போயுள்ளது.

 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இத் திட்டத்தை துவக்கி வைத்தார். கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களால் இன்டர்நெட் மூலம் விண்ணப்பிக்கும் முறையான இம் முன்னோடித் திட்டம் இப்போது முடங்கிப் போயுள்ளது.

 கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குத் தேவைப்படும் முதியோர் உதவித் தொகை, ரேஷன் கார்டு உள்ளிட்ட வருவாய்த் துறை தொடர்பான அனைத்து விதமான சான்றிதழ்கள் மற்றும் உத்தரவுகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் கையெழுத்துப் பெற்று வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் தொலைந்துவிட்டதென்றால் மீண்டும் தொடர்ந்து விண்ணப்பிக்க வேண்டும். இதனால் கிராமங்களில் இருப்பவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் சிரமம் அதிகம். மேலும் இடைத் தரகர்களின் தொந்தரவும் அதிகம்.

 இந்த நிலையை மாற்ற எண்ணிய அப்போதைய பொள்ளாச்சி சார் ஆட்சியர் விஜய் பிங்ளேவும், மாவட்ட ஆட்சியராக இருந்த நீரஜ் மித்தலும் கிராமப்புறங்களில் இருந்தே விண்ணப்பிக்கும் முறையைக் கொண்டு வந்தனர்.

 கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்குக் கணினிப் பயிற்சி கொடுத்து ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ஏற்றவாறு மென்பொருளைத் தயாரித்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யக் கற்றுக் கொடுத்தனர். இந்த விண்ணப்பம் சார் ஆட்சியருக்கு இமெயிலில் அனுப்பப்பட்டு அவர் மூலம் வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யப்படும். வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தை வருவாய் ஆய்வாளருக்கு அனுப்ப, அவர் மூலம் கிராம நிர்வாக அலுவலருக்கு விண்ணப்பம் போகும். கிராம நிர்வாக அலுவலர் விண்ணப்பதாரரை நேரடியாக விசாரித்துச் சான்றிதழ் வழங்கப் பரிந்துரை செய்வார். தமிழகத்திலேயே முதன் முதலாக இத்திட்டம் பொள்ளாச்சி தாலுகாவுக்கு உள்பட்ட கோலார்பட்டியில் துவக்கப்பட்டது.

 கோலார்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் இதற்காக ஓர் அறை ஒதுக்கப்பட்டு மகளிர்க்கு இணையதளப் பயிற்சியளிக்கப்பட்டது. விண்ணப்பிப்பதற்காக மகளிர் சுய உதவிக் குழுவினர் ஒருதொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு வருவாய் பெருகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 தமிழகத்தின் முன்னோடித் திட்டம் எனப் பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தைப் பெருமையாகத் தெரிவித்தார். இதுபோலத் தமிழகத்தின் அனைத்துக் கிராமங்களிலும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்குப் பயிற்சி தர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இத்திட்டம் துவக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் சார் ஆட்சியர் விஜய் பிங்ளேவுக்கு பின் வந்த கோட்டாட்சியர்கள் யாரும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டவில்லை. இதனால் மிகுந்த கோலாகலமாக கோலார்பட்டியில் துவக்கப்பட்ட இத்திட்டம் அதோடு  முடிந்துவிட்டது. இதற்கென வாங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் ஊராட்சி அலுவலகத்திலேயே யாருக்கும் பலனில்லாமல் கிடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.