/

சொந்த ஊருக்கே திரும்பும் பனியன் தொழிலாளர்கள்

திருப்பூர், ஏப்.26: பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து பிழைப்புத் தேடி திருப்பூர் வரும் தொழிலாளர்கள், தாங்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் திருப்பூரிலேயே செலவிட வேண்டிய நிலை இருந்து வருகிறது. இத

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:39 pm

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர், ஏப்.26: பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து பிழைப்புத் தேடி திருப்பூர் வரும் தொழிலாளர்கள், தாங்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் திருப்பூரிலேயே செலவிட வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில், பெரும்பகுதியினர் பின்தங்கிய தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அந்த மாவட்டங்களில் இவர்களின் உழைப்புக்கு போதிய ஊதியம் கிடைக்காததாலும், வேலைவாய்ப்புகள் குறைந்ததாலும் பிழைப்புத் தேடி திருப்பூருக்கு வருகின்றனர். திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தபோதிலும் அதில் பெரும்பகுதியை இங்கேயே செலவிட வேண்டியுள்ளது.

குறிப்பாக, திருப்பூரில் வீட்டு வாடகை நாளுக்குநாள் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. 150 சதுர அடியுள்ள வீட்டுக்கே 1,500 ரூபாய்க்கும் அதிகமாக வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. அதிலும், நல்ல குடிநீர் வசதி இருந்தால் அதற்கேற்ப வீட்டு வாடகை உயர்த்தி பெறப்படுகிறது. இதனால், பனியன் தொழிலாளர்கள் இரவு பகலாக கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியை வீட்டு வாடகைக்காகவே இழக்க நேரிடுகிறது.

இதுதவிர, ஒருவேளை உணவு சாப்பிட்டாலும் 30 முதல் 50 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது. நல்ல உணவுக்காக அதிகப்படியான தொகையை செலவிட முடியாததால் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வழங்கப்படும் சாலையோர தள்ளுவண்டி உள்ளிட்ட கடைகளையே தொழிலாளர்கள் அதிகம் நாடிச் செல்கின்றனர். இதனால், சில வருடங்களில் தொழிலாளர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

வீட்டு வாடகை, உணவு மட்டுமின்றி எந்தப் பொருள் வாங்கினாலும் திருப்பூரில் அதிகப்படியான விலை கொடுக்க வேண்டியுள்ளதால், தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதியை இங்கேயே செலவிடுகின்றனர். இதனால், திருப்பூர் வந்து பணியாற்றி வெறுங்கையுடன் ஊர் திரும்புவதற்குப் பதிலாக சொந்த ஊர்களிலேயே குறைந்த ஊதியத்துக்கு பிழைப்பு நடத்திக் கொள்ளலாம் என்ற மனநிலை தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது. திருப்பூரில் பணியாற்றும் பீகார், கேரளம், ஒரிசா உள்ளிட்ட பிற மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கே திரும்புவதே இதற்கு உதாரணம்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது பிரச்னை சிறியளவில் இருந்தாலும், விலைவாசி ஏற்றம் காரணமாக திருப்பூர் நிறுவனங்கள் திறன்மிக்க தொழிலாளர்களை இழந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இதேநிலை தொடருமானால் நாளடைவில் திருப்பூர் தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.

தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் இப் பாதிப்புகளைக் கருதி திருப்பூரில் வீட்டு வாடகை வசூலிப்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும், தொழிலாளர்கள் தங்குவதற்கு திருப்பூரையொட்டியுள்ள பகுதிகளில் அரசு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருப்பூரில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி விற்பதைத் தடுக்க, மாவட்ட மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு முறைப்படுத்த வேண்டும் என்பதே தொழிலாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.