/

171 ரன்களுக்கு இலங்கை ஆட்டமிழப்பு; அரையிறுதிக்குத் தகுதி பெறுமா நியூசிலாந்து?

நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்த இலங்கை 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:19 am

DIN

நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்த இலங்கை 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உலகக் கோப்பையில்  பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இலங்கை முதலில் பேட் செய்தது. 

இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. பதும் நிசங்கா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இருப்பினும், அதிரடியாக விளையாடிய குசல் பெரேரா அரைசதம் எடுத்தார். அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ் (6 ரன்கள்), சதிரா சமரவிக்கிரம (1 ரன்), சரித் அசலங்கா (8 ரன்கள்), ஏஞ்சலோ மேத்யூஸ் (16 ரன்கள்), சமிகா கருணாரத்னே (6 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதிக்கட்டத்தில் நிதானமாக விளையாடிய மஹீஸ் தீக்‌ஷனா 91 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் 46.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு இலங்கை ஆட்டமிழந்தது. நியூசிலாந்து தரப்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபெர்க்யூசன், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும்  கைப்பற்றினர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து  அணி களமிறங்குகிறது. அரையிறுதிக்கு தகுதி பெற இன்றையப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நியூசிலாந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.