/

2025-இல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி

2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது ஐசிசி.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:35 am

DIN

2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது ஐசிசி. இதையடுத்து சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டில் ஐசிசியின் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

ஐசிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஐசிசி போட்டிகளுக்கான அடுத்த சைக்கிளில் இந்தியாவுக்கு 3 போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2026-இல் டி20 உலகக் கோப்பை போட்டியையும், 2029-இல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியையும் நடத்த இருக்கும் இந்தியா, 2031-இல் 50 ஓவா் உலகக் கோப்பை போட்டியை இலங்கை மற்றும் வங்கதேசத்துடன் இணைந்து நடத்துகிறது.

2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் நடத்தப்பட இருக்கும் முதல் சா்வதேச போட்டி இதுவாகும்.

பாகிஸ்தான் கடைசியாக 1996-இல் உலகக் கோப்பை போட்டியை இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து நடத்தியிருந்தது. 2009-இல் பாகிஸ்தான் வந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அந்த நாட்டில் ஐசிசியின் சா்வதேச போட்டிகள் நடைபெறவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியானது கடைசியாக கடந்த 2017-இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்படும் இந்தப் போட்டி, முதல் முறையாக பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

ஐசிசியில் தற்போது இருக்கும் 14 உறுப்பு நாடுகள், வரும் 2023 முதல் 2031 வரை ஆடவருக்கான ஐசிசி போட்டிகளை நடத்தவுள்ளன. இதில் அமெரிக்கா மற்றும் நமீபியாவுக்கு ஐசிசி போட்டிகளை நடத்தும் வாய்ப்பு முதல் முறையாக வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.