/

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 'முக்கிய' கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதன் டி20 லீக் தொடரை இந்தியாவில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:17 am

Raghavendran

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதன் டி20 லீக் தொடரை இந்தியாவில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது. 

இதுதொடர்பாக மே 16-ஆம் தேதி மும்பையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைமை செயல் அலுவலர் அசதுல்லா கான், பிசிசிஐ தலைமை செயல் அலுவலர் ராகுல் ஜோரி மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாக செயல்பாடுகளின் பொது மேலாளர் சபா கரீம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், ஏற்கனவே இந்தியா தனக்கென டி20 லீக் தொடரை நடத்தி வருவதால் ஆப்கானுக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இருந்தாலும் தங்களுக்கென 3-ஆவது மைதானம் வேண்டும் என்ற ஆப்கான் கோரிக்கை ஏற்கப்பட்டது. 

டேராடூன், கிரேட்டர் நொய்டா ஆகியவற்றுக்கு அடுத்து ஆப்கன் அணிக்கு லக்னௌ மைதானத்தை பயன்படுத்த அனுமதி வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அதேபோன்று அவர்களுடைய 10 பயிற்சியாளர்கள் போதிய அனுபவம் பெற, ரஞ்சி தொடரில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2018-ஆம் ஆண்டில் அறிமுகமான ஆப்கன் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் 5 அணிகள் பங்கேற்றன. இதில் உலகளவில் பிரசித்தி பெற்ற கிறிஸ் கெயில், பிரெண்டன் மெக்கல்லம், பென் கட்டிங், ஷாகித் அஃப்ரிடி, காலின் இங்ராம், காலின் முன்ரோ உள்ளிட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.