அரையிறுதியில் பாகிஸ்தான் கரை சேர்த்தார் கேப்டன் சர்ஃப்ராஸ்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது லீக் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்.


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது லீக் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்.
புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை சந்திக்கிறது பாகிஸ்தான்.
237 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் அபாரமாக ஆடிய கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது 79 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தார்.
கார்டிஃப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணியில் குணதிலகா 13 ரன்களில் ஆட்டமிழக்க, டிக்வெல்லாவுடன் இணைந்தார் குஷல் மென்டிஸ். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. மென்டிஸ் 27 ரன்களில் வீழ்ந்தார்.
டிக்வெல்லா 73: இதையடுத்து வந்த தினேஷ் சன்டிமல் டக் அவுட்டாக, கேப்டன் மேத்யூஸ் களம்புகுந்தார். இதனிடையே மறுமுனையில் சிறப்பாக ஆடிய டிக்வெல்லா 52 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் 29 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது இலங்கை.
அந்த அணி 31.2 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்திருந்தபோது மேத்யூஸின் விக்கெட்டை இழந்தது. அவர் 39 ரன்கள் சேர்த்து ஆமிர் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
பின்னர் வந்த டி சில்வா 1 ரன்னில் நடையைக் கட்ட, டிக்வெல்லா 86 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் குணரத்னே 27, சுரங்கா லக்மல் 26 ரன்கள் சேர்த்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 49.2 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை.
பாகிஸ்தான் தரப்பில் ஜூனைத் கான், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாகிஸ்தான் வெற்றி: பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி-ஃபஹார் ஜமான் ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. மலிங்கா வீசிய 3-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய ஜமான், பின்னர் இலங்கை பந்துவீச்சாளர்களை பதம்பார்த்தார். அவர் 34 பந்துகளில் அரை சதம் கண்ட கையோடு ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.2 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்தது.
பின்னர் வந்த பாபர் ஆஸம் 10, முகமது ஹபீஸ் 1 ரன்னில் வெளியேற, அசார் அலி 50 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஷோயிப் மாலிக் 11, இமாத் வாசிம் 4 ரன்களில் நடையைக் கட்ட, 25.4 ஓவர்களில் 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பாகிஸ்தான்.
இதையடுத்து கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமதுவுடன் இணைந்தார் ஃபாஹிம் அஷ்ரஃப். இந்த ஜோடி சிறப்பாக ஆட, பாகிஸ்தானின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. ஆனால் அந்த அணி 29.5 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்திருந்தபோது அஷ்ரஃப் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். அவர் 15 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து சர்ஃப்ராஸ் அஹமதுவுடன் இணைந்தார் முகமது ஆமிர். இந்த ஜோடி அசத்தலாக ஆட, பாகிஸ்தான் சரிவிலிருந்து மீண்டது. ஒருபுறம் முகமது ஆமிர் மிக எச்சரிக்கையோடு ஆட, மறுமுனையில் சர்ஃப்ராஸ் 71 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதனால் அந்த அணியின் வெற்றி எளிதானது.
இறுதியில் 44.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது பாகிஸ்தான். சர்ஃப்ராஸ் 79 பந்துகளில் 61, ஆமிர் 43 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 8-ஆவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது.
இலங்கை தரப்பில் நுவான் பிரதீப் 3 விக்கெட் வீழ்த்தினார். எனினும் அந்த அணி 5 கேட்சுகளை கோட்டைவிட்டதால் வெற்றியை மட்டுமல்ல, அரையிறுதி வாய்ப்பையும் இழந்தது.

தோற்ற சோகத்தில் மலிங்கா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...