ஆல்ரவுண்டராக மகத்தான பங்களிப்பு: சன்ரைசர்ஸ் அணிக்குப் புத்துணர்ச்சி அளித்துள்ள ஹோல்டர்
29 வயது ஹோல்டர் இல்லாமல் அணியைப் பலப்படுத்த முடியாது என்கிற நிலைமை உருவானது.


சன்ரைசர்ஸ் அணி எப்படி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது என பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம்.
முதல் 9 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று போட்டியிலிருந்து வெளியேறும் நிலைமையில் இருந்தது சன்ரைசர்ஸ் அணி. ஆனால் கடைசி 6 ஆட்டங்களில் 5-ல் வென்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்போது தில்லி அணியை நாளை வென்றுவிட்டால் அடுத்ததாக ஐபிஎல் இறுதிச்சுற்றில் மும்பைக்கு எதிராக மோதலாம்.
இந்த ஐபிஎல் போட்டியில் மும்பையை வெல்வதற்கான சக்தி படைத்த ஒரே அணியாக அனைவரும் எண்ணுவது சன்ரைசர்ஸ் அணியைத் தான்.
திடீரென எப்படி எல்லாமே மாறிப்போனது?
ஜேசன் ஹோல்டர்.
மிட்செல் மார்ஷுக்குக் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து மே.இ. தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ஹோல்டரைத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. இதற்கு முன்பு நடைபெற்ற சிபிஎல் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடினார் ஹோல்டர். 192 ரன்களும் 10 விக்கெட்டுகளும் எடுத்திருந்தார். ஐபிஎல் ஏலத்தில் ரூ. 75 லட்சத்துக்கு ஹோல்டரைத் தேர்வு செய்ய எந்த அணியும் முன்வரவில்லை. வேறு எந்த வாய்ப்பும் இல்லாமல் போனதால் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தவருக்கு ஐபிஎல் வாய்ப்பு வந்தது. உடனடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகக் காயம் காரணமாக வில்லியம்சனால் விளையாட முடியாமல் போனது. இதனால் வேறு வழியின்றி ஹோல்டருக்கு வாய்ப்பு வழங்கியது சன்ரைசர்ஸ் அணி. நான்கு வருடங்கள் கழித்து தனது முதல் ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடிய ஹோல்டர், 3 விக்கெட்டுகள் எடுத்தது மட்டுமில்லாமல் ஒரு ரன் அவுட்டையும் செய்தார். இதனால் அந்த ஆட்டத்தில் எளிதாக வென்றது சன்ரைசர்ஸ் அணி.
அணியில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அதிவேகமாக, அச்சுறுத்தும் விதத்தில் பந்துவீசக் கூடிய ஒருவர் இல்லாமல் இருந்த குறையை ஹோல்டர் நீக்கினார். நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலியை வீழ்த்திய பந்து இதற்கு நல்ல உதாரணம்.
பஞ்சாப்புக்கு எதிராக கெயில், ஜோர்டன் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சுக் குழுவுக்குத் தலைமை தாங்கக் கூடியவராக மாறினார். அந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றாலும் இனிமேல் 29 வயது ஹோல்டர் இல்லாமல் அணியைப் பலப்படுத்த முடியாது என்கிற நிலைமை உருவானது.

வில்லியம்சன் அணிக்கு மீண்டும் திரும்பிய பிறகு ஹோல்டரை வெளியே தள்ள மனம் வரவில்லை. இதனால் பேர்ஸ்டோவை வெளியேற்றி சஹாவை விக்கெட் கீப்பர் ஆக்கினார்கள். இதன்மூலம் அருமையான அணி ஒன்றை உருவாக்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
ஹோல்டரின் வருகையால் ஐபிஎல் போட்டியின் 2-ம் பகுதியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த அணியாக சன்ரைசர்ஸ் மாறியது. ஹோல்டர், ரஷித் கான், சந்தீப் சர்மா தலா 8 விக்கெட்டுகளையும் நடராஜன் 7 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்கள்.
பெங்களூருக்கு எதிராக பந்துவீச்சில் 2/27 எடுத்த ஹோல்டர், 10 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
நேற்று, ஆர்சிபி அணிக்கு எதிரான பிளேஆஃப் ஆட்டத்தில் வில்லியம்சனுடன் இணைந்து பக்குவமாக விளையாடி, கடைசி ஓவர்களில் இரு பவுண்டரிகள் அடித்து அணியின் வெற்றிக்கு மற்றொரு பங்களிப்பை அளித்தார்.
(சமீபத்திய ஆட்டம்) 3/25& 24*, 2/25, 2/27 & 26*, 1/46, 2/27 & 5 ரன்கள், 3/33,
ஆறு ஆட்டங்களில் 13 விக்கெட்டுகள். பேட்டிங்கிலும் முக்கியமான பங்களிப்புகள். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடலாம். கைவசம் ஹோல்டரின் பந்துவீச்சு உள்ளதால் நம்பிக்கையுடன் இருக்கும் சன்ரைசர்ஸ் அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...