/

சுமையை அதிகரிக்க விரும்பவில்லை; இளம் வீரர்களை ஆதரிக்கும் ரோஹித் சர்மா!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

News image
ரோஹித் சர்மா- படம் | AP
Updated On :24 டிசம்பர் 2024, 11:03 am

DIN

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை மறுநாள் (டிசம்பர் 26) தொடங்கவுள்ளது. இரு அணிகளும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இளம் வீரர்களுக்கு ஆதரவு

மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர்கள் மீதான சுமையை அதிகரிக்கக் கூடாது எனவும், அவர்களுக்கு வழங்கப்படும் அதிகப்படியான ஆலோசனைகள் விஷயத்தை மேலும் சிக்கலாக்கிவிடும் எனவும் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் அனைவரும் ஒன்றாகவே பயணிக்கிறார்கள். அவர்களால் என்ன முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு அதிகப்படியான ஆலோசனைகளை வழங்கி விஷயங்களை சிக்கலாக்கிவிடக் கூடாது.

ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விளையாடுகிறார். அவரால் என்ன முடியும் என்பதை அவர் ஏற்கனவே நிரூபித்துவிட்டார். அவரிடம் அதிகப்படியான திறமைகள் இருக்கின்றன. அவரைப் போன்ற வீரர்களின் மனநிலையை அதிக அறிவுரைகள் வழங்கி விஷயங்களை கடினமாக்கக் கூடாது.

ஷுப்மன் கில் தரமான வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரது தரமான விளையாட்டுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். அவருடைய பேட்டிங் திறமைகள் குறித்து அவருக்கு நன்றாக தெரியும். அவருக்கு அதிகப்படியான அறிவுரைகள் தேவையில்லை.

ரிஷப் பந்த் மீது எந்த ஒரு அழுத்தமும் இல்லை. அவர் இங்கு 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார். இந்தியாவில் விளையாடியபோது, ரிஷப் பந்த் சிறப்பான ஃபார்மில் இருந்தார். இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் சரியாக விளையாடாததை வைத்து அவரை நாம் மதிப்பிட முடியாது. அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.