முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பயிற்சியாளர் பதவி: ரவி சாஸ்திரியைப் பின்னுக்குத் தள்ளிய இரு முக்கிய காரணங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக இருந்த ரவி சாஸ்திரி, தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல்தான் முதலில் வெளியானது. ஆனால் கடைசியில் அனில் கும்ப்ளே தேர்வானது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இரு முக்கிய காரணங்கள் ரவி சாஸ்திரியை பின்னுக்குத் தள்ளியதாக அறியப்படுகிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:34 pm

எழில்

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக இருந்த ரவி சாஸ்திரி, தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல்தான் முதலில் வெளியானது. ஆனால் கடைசியில் அனில் கும்ப்ளே தேர்வானது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இரு முக்கிய காரணங்கள் ரவி சாஸ்திரியை பின்னுக்குத் தள்ளியதாக அறியப்படுகிறது.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என ரவி சாஸ்திரி ஆரம்பத்தில் கூறிவந்தார். ஆனால் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குருடனான சந்திப்புக்குப் பிறகு பயிற்சியாளர் பதவிக்கு அவர் மீண்டும் விண்ணப்பிக்க முடிவு செய்தார். இதேபோல் உதவிப் பயிற்சியாளர்களாக இருந்த சஞ்சய் பாங்கர், பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோரும் மீண்டும் பயிற்சியாளர் பதவிகளில் நியமிக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது.

பிசிசிஐ மூத்த நிர்வாகி இதுகுறித்து அப்போது கூறுகையில், ‘ரவி சாஸ்திரி மற்றும் உதவிப் பயிற்சியாளர்களின் செயல்பாடு பிசிசிஐக்கு திருப்தியளிப்பதாக அமைந்தது. எனினும் ரவி சாஸ்திரி கூட்டணி மறுபடியும் பயிற்சியாளர் பதவிகளுக்கு வரவேண்டும் என்றால் அதற்கு முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியாளர் பதவிக்கான விளம்பரம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. அதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்' என்றார்.

பிசிசிஐ வட்டாரங்கள் நிலவரம் குறித்து அப்போது கூறுகையில், ‘பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்ட அனுராக் தாக்குரை ரவி சாஸ்திரி மற்றும் உதவிப் பயிற்சியாளர்கள் தில்லியில் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது. அப்போது கடந்த 18 மாதங்களில் ரவி சாஸ்திரி மற்றும் உதவிப் பயிற்சியாளர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக அனுராக் தாக்குர் பாராட்டியுள்ளார். அதேநேரத்தில் தகுதியுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே பிசிசிஐ அறிவித்துவிட்டது. அதனால் மற்ற விண்ணப்பதாரர்களைப் போலவே ரவி சாஸ்திரி கூட்டணியும் முறையாக விண்ணப்பிப்பதுதான் நியாயமாக இருக்கும். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ‘லெவல் 3' பயிற்சியாளர் படிப்பை முடித்திருப்பதோடு, சீனியர் அணிகளுக்கு பயிற்சியளித்தவராக இருக்க வேண்டும். இல்லையெனில் தனது நாட்டுக்காக 50 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும் என்பதுதான் தற்போது கடைப்பிடிக்கப்படும் விதிமுறை. பயிற்சியாளர் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கூறினால், 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரவி சாஸ்திரியின் பெயரை பரிசீலிக்க முடியாது. ஆனால் இப்போது அதுபோன்ற விதிகள் இல்லாததால் ரவி சாஸ்திரியின் பெயரை பரிசீலிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது' என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபோல சாதகமாக இருந்த ரவி சாஸ்திரியின் தேர்வு இரு காரணங்களுக்காகப் பின்னடைவைச் சந்தித்தது. அதில் முக்கியமான ஒன்று கோலிக்கு ஆதரவாகப் பேசுவது போல பேசி தோனிக்கு எதிரான கருத்தை வெளியிட்டது.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்க விராட் கோலி தயாராகிவிட்டார் என ரவி சாஸ்திரி சென்ற மாத இறுதியில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கோலியும், ஒரு நாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக தோனியும் உள்ளனர். இந்த நிலையில் ரவி சாஸ்திரி கூறியதாவது: இந்திய அணி வரக்கூடிய மாதங்களில் அதிக அளவில் டெஸ்ட் போட்டியில்தான் விளையாடவுள்ளது. எனவே நீண்ட நாள்களுக்குப் பிறகு தோனி விளையாடும்போது அது அவருக்கு கடினமானதாக அமையும். எனவே தோனி தனது கேப்டன் பதவியை கோலியிடம் ஒப்படைக்க இதுதான் சரியான தருணம். நான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால் அனைத்துவிதமான போட்டிகளுக்கும் கோலியை கேப்டனாக நியமிப்பது குறித்து சிந்தித்து இருப்பேன் எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆனால் அது தோனிக்கு நெருக்கடியை உண்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதை பிசிசிஐ விரும்பவில்லை. தோனி ஓய்வு பெறும்வரை அவரை நெருக்கடிக்கு ஆளாக்கவேண்டியதில்லை என்று பிசிசிஐ முடிவெடுத்ததாகத் தெரிகிறது. அடுத்த சாம்பியன்ஸ் டிராபி வரை தோனியின் தலைமைப் பதவிக்கு ஆபத்தில்லை. எனவே ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆனால் அது குழப்பத்தை உண்டாக்கும் என்று பிசிசிஐ கருதியதாகத் தெரிகிறது.

அடுத்ததாக, ரவி சாஸ்திரியைத் தேர்வு செய்வதில் கங்குலிக்கு விருப்பம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி இந்த நேர்காணலை நடத்தியது. இவர்களில் சச்சின் லண்டனில் இருப்பதால் விடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்தினார். இதில் அனில் கும்ப்ளே நேரடியாகப் பங்கேற்றார். அதேநேரத்தில் ரவி சாஸ்திரி வெளிநாட்டில் இருப்பதால் ஸ்கைப் மூலம் நேர்காணலில் பங்கேற்று தனது பயிற்சி திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது கங்குலி, ரவி சாஸ்தியின் நேர்காணலின்போது பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரவி சாஸ்திரியை விடவும் கும்ப்ளேவால் நிச்சயம் சிறப்பாகப் பணியாற்றமுடியும் என்று கங்குலி மிகவும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. கங்குலி, டெண்டுல்கர், லட்சுமணன் ஆகியோருக்கு கும்ப்ளே நெருக்கமான நண்பராக இருந்ததும் கும்ப்ளே தனது திட்டங்களை நேர்காணலில் அழகாக வெளிப்படுத்தியதும் சாஸ்திரியின் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

ரவி சாஸ்திரி 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். சாஸ்திரியின் மேற்பார்வையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணி, அரையிறுதி வரை முன்னேறியது. இலங்கையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இதுபோல, ரவி சாஸ்திரிக்குச் சாதகமான அம்சங்கள் பல இருந்தாலும் கும்ப்ளேவால் வெளிநாடுகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்கிற நம்பிக்கை பிசிசிஐ-க்கு ஏற்பட்டதால் அவரைத் தேர்வு செய்வது எளிதாக அமைந்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.