/

கிரிக்கெட் பற்றி பேசியாகவேண்டும் என அனுஷ்கா சர்மா வற்புறுத்தமாட்டார்: கோலி

மேட்சின் முக்கியமான தருணங்களின்போது என்ன நினைத்து ஒரு முடிவை எடுக்கிறேன் என்பதில் அனுஷ்கா சர்மாவுக்கு ஆர்வம் அதிகம்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:39 am

எழில்

மேட்சின் முக்கியமான தருணங்களின்போது என்ன நினைத்து ஒரு முடிவை எடுக்கிறேன் என்பதில் அனுஷ்கா சர்மாவுக்கு ஆர்வம் அதிகம் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

க்ரிக்இன்போ இணையத்தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தோனி, டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அடுத்த டெஸ்டுக்கு நான் கேப்டனாக நியமிக்கப்பட்டேன். நிலைமை இயல்புக்குத் திரும்பிய பிறகு என் ஹோட்டல் அறைக்குச் சென்றேன். டெஸ்ட் தொடரைப் பார்க்க வந்திருந்த அனுஷ்கா சர்மா அங்கு இருந்தார். அவரிடம் டெஸ்ட் அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து சொன்னேன். அவருடைய உணர்வுகளும் கலவையாக இருந்தன, எப்படி திடீரென இது நடந்தது, ஏன் தோனி ஓய்வு பெற்றார் என.

பிறகு, இனி இந்திய டெஸ்ட் அணிக்கு ஒருசில ஆட்டங்களில் மட்டுமல்ல, நிரந்தரமாக நான் தான் டெஸ்ட் கேப்டன் என்று உணர்ந்தபிறகு அழ ஆரம்பித்தேன். நான் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தபோது 26 வயதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாவேன் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்கமாட்டேன்.

உலகக்கோப்பையில் இந்திய அணி தோற்றதற்கு அனுஷ்கா சர்மா மீது குறை சொன்னதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. நம் நாட்டில் ஒருதரப்பினர் இப்படித்தான் எண்ணுவார்கள், ஏதாவது சரியாகாமல் போனால் அதற்கான பழியை பெண்கள் மீது போடுவார்கள்.

மேட்சின் முக்கியமான தருணங்களின்போது என்ன நினைத்து ஒரு முடிவை எடுக்கிறேன் என்பதில் அனுஷ்கா சர்மாவுக்கு ஆர்வம் அதிகம். மேட்சின் அந்தத் தருணத்தில் நாங்கள் அப்படி எண்ணினோம், நீ என்ன நினைத்து அந்த முடிவை எடுத்தாய் என்று கேட்பார். இப்படி ஓரளவு கிரிக்கெட் பற்றி பேசிக்கொள்வோம். ஆச்சர்யம் என்னவென்றால், கிரிக்கெட் பற்றி நான் அவருடன் பேசியாகவேண்டும் என வற்புறுத்தமாட்டார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.