ஐபிஎல்: சென்னை அணியின் மனு விசாரணைக்கு ஏற்பு!
27-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பிசிசிஐக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஐபிஎல் போட்டிகளிலிருந்து 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மற்றும் அவர்கள் சார்ந்த அணிகள் குற்றவாளிகள் என்று முத்கல் குழு கூறியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுக்க ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரியில் நியமித்தது. 6 மாத கால விசாரணைக்குப் பிறகு தனது தீர்ப்பை லோதா குழு கடந்த ஜூலை 14-ஆம் தேதி அளித்தது.
அந்தத் தீர்ப்பில், விதிகளை மதிக்காமல் அணியின் தலைமை நிர்வாகிகளுக்கு (குருநாத், ராஜ் குந்த்ரா) உடந்தையாகச் செயல்பட்டதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அணிகளின் நிர்வாகிகள் குருநாத் மெய்யப்பன், குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு வாழ்நாள் தடை விதிப்பதாகவும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
குருநாத் மெய்யப்பன் எந்தவித கிரிக்கெட் செயல்பாடுகளிலும் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் எந்த அணிக்கும் உரிமையாளர் அல்ல, பயிற்சி பெற்ற கிரிக்கெட் வீரரும் அல்ல. மேலும், ஊழலுக்கு எதிரான விதிகளையும், ஐபிஎல் செயல்பாட்டு விதிகளையும் மீறிய உண்மையான குற்றவாளி அபராதத் தொகை கூட விதிக்கப்படாமல் தப்பித்துள்ளார். ஆனால், இந்த உத்தரவால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் தான் பாதிப்படைந்துள்ளனர்.
இது மட்டுமல்லாது, சூப்பர் கிங்ஸ் அணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இந்த அணி தக்க வைத்திருந்த தோனி உள்ளிட்ட முன்னணி வீரர்கள், இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் வேறு அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். இதனால், எங்கள் அணி 2018-ஆம் ஆண்டு போட்டிகளில் பங்கேற்ற அனுமதிக்கப்படும்போது நெருக்கடியான நிலை ஏற்படும். இதுதவிர, குருநாத் மெய்யப்பனுக்கு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் எந்தவிதப் பங்கும் இல்லை, அவர் சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் இல்லை. மேலும், ஐபிஎல் விதிகளின்படி அணியின் விருந்தினர் என்ற அடிப்படையில் மைதானத்தில் நுழையவும், போட்டிகளைப் பார்வையிடவும் அங்கீகார அட்டை வழங்கப்படும் ஒவ்வொருவரும் அணியின் நிர்வாகியாகக் கருதப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படியே குருநாத் மெய்யப்பனும் அணியின் நிர்வாகியாகக் கருதப்பட்டார்.
எனவே, நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இதுதவிர, எங்கள் அணி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அனுமதிக்குமாறு பிசிசிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
இந்நிலையில், சென்னை அணியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. 27-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பிசிசிஐக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...