/

ஒரு ஜாதகர் செல்வம் பெறும் வழியும்! பெறா நிலையும்!! (பராசரர் கூறும் D-2 சக்கரம் மூலம் அறியும் வாய்ப்பு)

பராசரர், மானிடர்கள் தேவைகளை அறிந்து, ஒவ்வொரு தேவைகளுக்குமாக பல்வேறு..

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:05 am

ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்

பராசரர், மானிடர்கள் தேவைகளை அறிந்து, ஒவ்வொரு தேவைகளுக்குமாக பல்வேறு சக்கரங்களைத் தந்து, உய்வித்துள்ளார் என்றால் அது மிகை ஆகாது. ஆனால் இவற்றை சர்வாஷ்டக வர்க்கம் போல் இவற்றையும் ஆராய்ந்து வட இந்தியாவில் இன்றும் நடைமுறைப் படுத்துகின்றனர் அங்குள்ள ஜோதிடர்கள். இது சற்று கடினமானதென்பதாலும், இவற்றைக் கணித்து பலன் சொல்பவர்கள் அதற்கான கட்டணத்தை அதிக அளவில் கேட்பதாலும், சாதாரண மக்களால் இவற்றைக் கண்டு கேட்க முடிய வில்லை. 

இந்த கட்டுரையைச் சாதாரண ஜோதிட ஆர்வலர்களுக்கும், ஜோதிடம் சம்பந்தமாகப் பயிலும் மாணாக்கர்களுக்கும் பயன் பெறும் என்ற நோக்கில் இவற்றை இங்கு அளித்துள்ளேன். 

இந்த கட்டுரையில் , நாம் D - 2 எனும் ஹோரா சக்கரத்தைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம். இதன் மூலம் ஒரு ஜாதகர், தமக்குச் செல்வம் பெறும் நிலை உள்ளதா அல்லது பெற இயலாத நிலை உள்ளதா என இந்த சக்கரத்தின் மூலம் , பராசரர் அருமையாக விவரிப்பதைக் காண்போம். 

ஹோராவில், லக்கினம் தான் மிக முக்கியம். 

ஹோராவில் , லக்கினமானது கடகத்திலோ அல்லது சிம்மத்திலோ தான் அமரும். ஹோராவில் , ராகு, கேதுக்கள் ஒரே ராசியில் தான் அமரும். D-1 இல் ஒற்றைப் படை ராசியில் (கால புருஷ சக்கரம் படி ...1, 3, 5, 7, 9 11 ராசிகளில்) முதல் 15 பாகைக்குள் அமரும் லக்கினமானது D 2 ஹோராவில் சிம்மமே லக்கினமாக அமையும். 

D-1இல் ஒற்றைப் படை ராசியில் (கால புருஷ சக்கரம் படி ...1,3,5,7,9,11 .. ராசிகளில்) 16 முதல் 30 பாகைக்குள் அமரும் லக்கினமானது D 2 ஹோராவில் கடகமே  லக்கினமாக அமையும். 

D-1இல் இரட்டைப் படை ராசியில் (கால புருஷ சக்கரம் படி ...2,4,6,8,10,12... ராசிகளில்) முதல் 15 பாகைக்குள் அமரும் லக்கினமானது D 2 ஹோராவில் கடகமே  லக்கினமாக அமையும். 

D-1இல் இரட்டைப் படை ராசியில் (கால புருஷ சக்கரம் படி ...2,4,6,8,10,12... ராசிகளில்) 16 முதல் 30 பாகைக்குள் அமரும் லக்கினமானது D 2 ஹோராவில் சிம்மமே லக்கினமாக அமையும்.

முக்கிய விதி:-

D-2 வில் கடகம் லக்கினமாக அமைந்தால், சிம்மம் 2 வது வீடாக வரும். 

D-2 வில் சிம்மம் லக்கினமாக அமைந்தால், கடகம் 12 வது வீடாக வரும். 

ஒருவரின் ஜாதகத்தில் D-2 ஹோரா சக்கரத்தில்; கடக ராசியில் அதிக கிரஹங்கள் அமருமே ஆனால், செல்வம் கிடைப்பது என்பது எளிமையானதாகும். ஒருவரின் ஜாதகத்தில் D-2 ஹோரா சக்கரத்தில், சிம்ம ராசியில் அதிக கிரஹங்கள் அமருமே ஆனால் செல்வம் கிடைப்பது என்பது கடினமானதாகும். 

ஒரு ஜாதகரின் ராசியில் 2ஆம் அதிபதி,  D -2 ஹோரா சக்கரத்தில்; லக்கினத்தில் இருப்பாரேயானால்  அனைத்து செல்வங்களும் ஜாதகரின் வாழ்நாளுக்குள் ஜாதகர் தன் சொந்த உழைப்பாலே பெறுவார். இவை அனைத்தும் ஜாதகரின், தசா கலங்களில் நடைபெறும். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் இதன் பயனை பெறுவார்கள்.  

ஒரு ஜாதகரின் ராசியில் 2ஆம் அதிபதி,  D -2 ஹோரா சக்கரத்தில்; 2 ஆம் இடத்தில் (கடகம் ஹோரா லக்கினமாகக் கொண்டவர்கள் மட்டும்.) இருப்பாரேயானால் அனைத்து  செல்வங்களும் ஜாதகரின்  குடும்பத்தினரிடம் (IN HERITANCE) இருந்தே பெறுவார். பரம்பரை சொத்தின் பங்கு தாரராக இருப்பார். 

ஒரு ஜாதகரின் ராசியில் (D -1) 2-ஆம் அதிபதி,  D-2 ஹோரா சக்கரத்தில்; 12 ஆம் இடத்தில் இருப்பாரேயானால்  அனைத்து செல்வங்களும் ஜாதகரின் வாழ்நாளுக்குள் ஜாதகரை விட்டு விலகிவிடும் . இவை அனைத்தும் ஜாதகரின், தசா கலங்களில் நடைபெறும். 

2ஆம் அதிபதியும் 2ஆம் இடத்து  காரக கிரகமும், D -2 ஹோரா சக்கரத்தில் 2 ஆம் இடத்தில் (ஒரே ராசியில்) அமர்ந்திருந்தால் , செல்வம் சேர்வது எளிமையானதாகவும் குறைந்த ஆதரவுடன் குறைந்த காலத்துக்குள் கிடைக்கப் பெறும்.

2ஆம் அதிபதியும் 2ஆம் இடத்துக்  காரக கிரகமும், D -2 ஹோரா சக்கரத்தில் 2 / 12 ஆக அமர்ந்திருந்தால் , செல்வத்தைத் துரத்துவது கட்டாயமாகும். பணத்தை இழப்பதோடு வாழ்நாள் முழுதும் அதனைத் தேடுவதிலேயே காலம் கழியும். வரவும் செலவும் ஒன்றாகவே இருக்கும்.

D-2 ஹோரா சக்கரத்தில் சிம்ம லக்கினமாக (சூரியன் லக்கினாதிபதி) இருப்பின் 12 ஆம் வீட்டு அதிபதியான சந்திரன், D-1 சக்கரத்தில் கேந்திரத்திலோ, த்ரிகோணத்திலோ, ஆட்சி, உச்சம் நட்பு பெற்று இருப்பின் மற்றும் 6, 8, 12 இல் மறையாமலும் நீச்சம் பெறாமலும் இருப்பின், செல்வம் அதிகப்படுத்தவோ, செலவைக் கட்டுப் படுத்தவோ இயலாமல் போகும். வரவும் செலவும் மாறி மாறி வரும். 2, 3, 11 இல் அமர்ந்தால் ஜாதகர் ஓரளவு சொத்தை அனுபவிக்க இயலும். 

D-2 ஹோரா சக்கரத்தில் கடக லக்கினமாக (சந்திரன் லக்கினாதிபதி) இருப்பின் 2ஆம் வீட்டு அதிபதியான சூரியன், D -1 சக்கரத்தில் கேந்திரத்திலோ, திரிகோணத்திலோ, ஆட்சி, உச்சம் நட்பு பெற்று  இருப்பின் மற்றும் 6, 8, 12 இல் மறையாமலும் நீச்சம் பெறாமலும் இருப்பின், செலவையும் உணர்ச்சிகளையும்  கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். 

இது போலவே, பராசரரின் அனைத்துச் சக்கரங்களையும், அவற்றின் பயன்களையும் ஒவ்வொன்றாக அறியலாம். அதனைப் பயன்படுத்தி இந்த மனித சமுதாயத்திற்கு அளிப்போம். 

சாயியை பணிவோம், எல்லா நலமும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.