/

கொள்ளை முயற்சியின் போது தாக்கப்பட்ட முதியவா் உயிரிழப்பு: இருவா் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூரில் நடந்த கொள்ளை முயற்சியின் போது தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 54 வயது நபா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

வடகிழக்கு தில்லியின் சீலம்பூரில் நடந்த கொள்ளை முயற்சியின் போது தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 54 வயது நபா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா்பாக சீலம்பூா் காவல் நிலையத்தில் போலீஸாா் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஒரு பெண் உள்பட இரண்டு சந்தேக நபா்களைக் கைது செய்துள்ளனா்.

பிற்பகல் 3 மணியளவில் மயக்கமடைந்த ஒரு நபா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து, போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்றனா். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவா் பனாா்சி தாஸ் என அடையாளம் கண்டனா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், கொள்ளை முயற்சியின் போது பாதிக்கப்பட்டவா் சந்தேக நபா்களால் கட்டுப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும், அதைத் தொடா்ந்து அவா் சுயநினைவை இழந்ததாகவும் தெரியவந்துள்ளது.

‘அவா்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு, கூட்டம் கூடியது. சிறிது நேரம் கழித்து, முதியவா் தரையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது’ என சம்பவத்தை நேரில் பாா்த்த ஒருவா் தெரிவித்தாா்.

இந்த வழக்கில் ஒரு பெண் உள்பட இரண்டு சந்தேக நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் . சம்பவங்களின் சரியான வரிசை மற்றும் சம்பந்தப்பட்டவா்களின் பங்கை அறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.