ஆண்கள் யாரும் அப்படி உட்கார்ந்து பார்த்ததில்லை. அவர்களுக்கு எப்போதும் பெட்டிக்கடைகள் கை கொடுத்து விடும். பள்ளிக்கூட மதிற்சுவரை ஒட்டி உட்கார்ந்து கொண்டு கூடையிலோ அல்லது கூறு கட்டியோ பழங்களும், கிழங்குகளும் விற்றுக் கொண்டிருந்தது பெரும்பாலும் பெண்களே! அந்தப் பெண்களை எல்லாம் இப்போது இழந்து விட்டோம். சென்னையில் தடுக்கி விழுந்தால் பள்ளிக்கூடங்களில் தான் விழ வேண்டியிருக்கும் ஆயினும் மதிற்சுவரை ஒட்டி இப்படிப் பட்ட சிறு பெண் வியாபாரிகளை பள்ளி நிர்வாகங்கள் அண்டவிடுவதில்லை. மாணவர்களின் பாதுகாப்பு காரணமாக என்று சிலர் சால்ஜாப்பு சொன்னாலும் முக்கியமான காரணம் அவர்கள் தான் உள்ளேயே கேண்டீன் வைத்துக் கொண்டிருக்கிறார்களே! சரி அவற்றிலாவது மேலே குறிப்பிட்ட கொய்யாப்பழங்களும், பனங்கிழங்குகளும், கொடிக்காப்புளியும், பலாக்கொட்டைகளும், சீனிக்கிழங்கும் கிடைக்கிறதா? என்று பார்த்தால்.... மூச்! அங்கு அதற்கெல்லாம் இடமே இல்லை. பப்ஸ்கள், மில்க் ஷேக்குகள், ரெடிமேட் மாம்பழ, ஆரஞ்சு ஜுஸ்கள், விதம் விதமான சாக்லேட்டுகள், கேக்குகள், சாக்கோ ஸ்டிக்குகள், சமோஸாக்கள் தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.