மூன்று வருடங்களுக்கு முன்பு திடீரென ஒரு ஆர்வம் கிளர்ந்தெழுந்து மொத்தமாக நிறையப் பூச்செடிகள் வாங்கினோம். பல வண்ண ரோஜாச் செடிகள். வெள்ளை ரோஜா, கிரீம் நிறத்தில் ஒரு ரோஜா, மஞ்சளும் இளஞ்சிவப்புமாய் ஒரு ரோஜா, சிவப்பு ரோஜா, ஃபேண்டா நிறத்தில் ஒரு ரோஜா, பன்னீர் ரோஜாச்செடி ஒன்று என்று மொத்தம் 6 ரோஜாச்செடிகள். இரண்டு சிவப்பு இட்லிப்பூச்செடிகள், இரண்டு வெள்ளை இட்லிப்பூச்செடிகள், சிவப்பு நாட்டுச் செம்பருத்திச் செடி 1, அடுக்குச் செம்பருத்தி 1, வெள்ளைச் செம்பருத்தி 1, மஞ்சளும், வெள்ளையுமாய் செவ்வந்திப்பூச்செடி 1, மஞ்சளுமில்லாத, சிவப்புமில்லாத நடுவாந்திர நிறத்தில் கேந்திப்பூச்செடிகள் பல. (கேந்திப்பூச்செடிகளை மட்டும் விலைக்கு வாங்கவில்லை, கிணற்றடியில் கண்டெடுத்தேன்) ஜாதிமல்லிப்பூச்செடி ஒன்று, மரமல்லி ஒன்று என்று வாங்கிக் குவித்திருந்தோம். வாங்கிய ஜோரில் இவை அனைத்துடனும் தினமும் காலையில் முழுதாய் அரைமணி நேரம் செலவளித்துப் பேசிக்கொண்டிருக்கும் வழக்கம் எனக்கிருந்தது.