கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த குழந்தை மேதை முகமது யூசுபை பற்றித் தெரியுமா உங்களுக்கு? ஆசிரியை கணிதம், அறிவியல், மொழிப்பாடங்கள், சமூக அறிவியல் என எந்தப் பாடத்தில் இருந்து கேள்விகளை எழுப்பினாலும் சற்றும் தயங்காது ஆசிரியை கேள்வி கேட்டு முடிப்பதற்குள்ளாகவே பதிலுடன் நிற்கிறான் இந்தச் சிறுவன். அவனது பதில் அளிக்கும் திறன் கண்டு அவனுக்கு கற்பிக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் ‘ இவனென்ன தெய்வப் பிறவியோ’ என வியந்து போய் நிற்கிறார்கள். காரணம் அவனது வயது வெறும் 5 மட்டுமே! அதுமட்டுமல்ல முகமது யூசுப்பின் அம்மா, அப்பா இருவருமே பத்தாம் வகுப்பிற்கு மேல் பள்ளி சென்று படிக்க இயலாத அளவுக்கு வறுமையில் உழல்பவர்கள். நகரத்துப் பெற்றோர்களைப் போல தங்களது குழந்தையை டியூசன் செண்ட்டருக்கு அனுப்பியோ அல்லது தாங்களே கற்றுத் தந்தோ மேதையாக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஞானமும் இல்லை... நேரமும் இல்லை. பிறகெப்படி சிறுவன் தான் இதுவரை படித்தறியாத விஷயங்களில் இருந்து கேள்விகள் கேட்டால் கூட உடனடியாக டக் டக்கென்று பதில் சொல்கிறான் என்பது தான் அவனது ஆசிரியப் பெருமக்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் கூட மிகப்பெரிய ஆச்சர்யம். இப்படி கற்றுத்தராமலே தங்கள் மகன் 5 வயதில் நடமாடும் என்சைக்ளோபீடியா போல திகழ்வது அவனது பெற்றோர்களுக்கு பெருமகிழ்ச்சி.