60 களில் நம்பர் ஒன் குழந்தை நட்சத்திரமாகத் திகழ்ந்த டெய்ஸி ராணியை அறியாதவர்கள் இருக்க முடியாது. ஜெமினி, சாவித்ரி நடித்த ‘யார் பையன்’ திரைப்படத்தில் சிறுவனாக நடித்த டெய்ஸி ராணியின் குறும்பை ரசிக்காதவர்கள் யார்? டெய்ஸி ராணி இன்று பாலிவுட்டில் பிரபல நடிகரான ஃபர்கான் அக்தர் மற்றும் பிரபல நடன இயக்குனருமான ஃபாராகானின் பெரியம்மாவாகவும் அறியப்படுகிறார். தான் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் டெய்ஸி ராணி இது போன்றதொரு குற்றச்சாட்டை எழுப்பவில்லை. தற்போது இந்திய நடிகைகளிடையே பரவலாகி வரும் #metoo ஹேஷ்டேக் தொடர் மூலமாக பாலிவுட், டோலிவுட், கோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட் என அனைத்து வுட்களைச் சார்ந்த நடிகையரும் தமக்கு திரைப்படத்துறையில் நுழைந்த கணத்தில் இருந்து இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் பாலியல் துஷ்பிரயோக அவமதிப்புகளை ஊரறியச் செய்து அம்பலப்படுத்தி வருகின்றனர். இந்த தொடக்கத்துக்கு வித்திட்டவர் என கடந்த ஆண்டு தனக்கு நேர்ந்த பாலியல் வன்முறைக் கொடுமையை எதிர்த்து வலுவாகக் குரல் கொடுத்து போராடத் துணிந்த கேரள நடிகையைத் தான் பாராட்ட வேண்டும். திரைப்பட உலகில் பணியாத நடிகைகளைப் பணிய வைக்க பட அதிபர்கள், இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் முதல் அடுத்தடுத்த கட்டப் பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள் வரை நடிக்க வாய்ப்புக் கேட்டு வரும் பெண்களை எவ்விதமாக துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என அவரது வழக்குக்குப் பிறகே பலர் துணிந்து வெளியில் சொல்ல முன்வந்தனர். தனக்கு எதிராகப் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் கூலிக்கு ஆட்களை அமர்த்தி நடிகையைக் கடத்தி பாலியல் வன்முறை செய்து அதைக் காணொளியாகப் பதிவு செய்து நடிகையை மிரட்டத் துணிந்த போது இந்த அநியாயத்தை முறியடிக்க சற்றும் அச்சமின்றி அவர் துணிந்து முதலடியை எடுத்து வைத்ததால் அவரைத் தொடர்ந்து திரைத்துறையில் இருக்கும் பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த பழைய பாலியல் துயரங்களைக் கூட பிறருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்ற ரீதியில் சமூக ஊடகங்களில் #meetoo ஹேஷ்டேக் மூலமாகப் பகிரத் தொடங்கினர். வயது வித்யாசங்களின்றி இதுவரை தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகளை அப்படிப் பதிவு செய்த நடிக, நடிகையர் பல்லாயிரக் கணக்கானோர் இருக்கலாம். தற்போது பிரபல குழந்தை நட்சத்திரமான டெய்ஸி ராணியும் அவர்களில் ஒருவராகி இருக்கிறார்.