மொத்தத்தில் காதலித்த பெண்ணோ அல்லது கட்டிய மனைவியோ ஒரு ஆணை ஏன் வெறுக்கத் தொடங்குகிறாள்? என்று ஆராய்ந்தாலே போதும் இப்படியான கொலைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டி விடலாம். ஆனால், ஆண்கள் யோசிக்க மறுக்கிறார்கள். காதலிக்கும் போதும் சரி, அந்தக் காதல் கல்யாணத்தில் முடிந்து இல்லறத்தின் போதும் சரி ஆணின் தவறுகளை எல்லாம் அனுசரித்து விட்டுக் கொடுத்து அவனது கோபதாபங்களுக்கு இலக்காகி சாப்பாடு முதல் படுக்கை வரை சகல விஷயங்களிலும் அவனது விருப்பங்களுக்கு ‘நோ’ சொல்லாமல் காலம் தள்ளும் பெண்களை மட்டுமே அவர்கள் பெண்மையின் இலக்கணமாகக் கருதுகிறார்கள். அப்படியில்லாமல் ஒரு பெண், காதலியாக இருக்கும் போதும் சரி, கல்யாணத்திற்குப் பின் மனைவியாக இருக்கும் போதும் சரி, காதலனது, கணவனது குறைகளை அடையாளம் கண்டு அவனோடு வாழ மறுத்தால் கழுத்தறுத்தோ, அரிவாளால் வெட்டியோ, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தோ கொலை செய்து விட வேண்டியது தானா?