கடந்த மாதத்தில் ஒருநாள் அலுவலகம் முடிந்து மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். செல்லும் வழியில் எங்கள் குடியிருப்பில் இருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றில் மறுநாளைக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் செல்வது வழக்கம். அன்றும் அப்படிப் பொருட்களை வாங்கிக் கொண்டு பில் போடும் போது பில் கவுண்ட்டரில் இருந்த பையன் சொன்னான்... மேடம், நேத்து அசோஸியேசன் மீட்டிங் நடந்ததாம்... அப்போ நம்ம குடியிருப்பில் இனி யாரும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாதுன்னு தீர்மானம் போட்டிருக்காங்களாம். அதனால அடுத்த மாசத்துல இருந்து நம்ம கடையில பிளாஸ்டிக் பைகள் கிடையாது மேடம். ப்ளீஸ் இனிமே கோச்சுக்காம நீங்களே பை கொண்டு வந்துடுங்களேன்’ என்றான். எனக்கு முதலில் அவனது இந்தக் கோரிக்கை எரிச்சலூட்டினாலும், அடுத்த மாசத்துல இருந்து தானே... இப்போ இல்லையே... இப்போ பிளாஸ்டிக் பை இருக்கா, இல்லை நான் வாங்கின பொருட்களை எல்லாம் துப்பட்டால மூட்டை கட்டித்தான் தூக்கிட்டுப் போயாகனுமா? என்று ஒரு நொடி யோசித்துக் கொண்டு நின்றேன். அதற்குள் எனக்கடுத்து நின்றிருந்த பெண்மணி ஒருவர், ‘ஆமா, இவங்க மீட்டிங் போடும் போதெல்லாம் இப்படித்தான் எதையாவது கிளறி விட்டுப் போவாங்க, ஆனா, ஜனங்க அதுக்கு ஒத்துக்கனுமே? பாருங்க ஒருத்தர் கையிலயாவது துணிப்பையோ, சணல் பையோ இருக்கான்னு? நீங்க பிளாஸ்டிக் கேரி பேக் தரலைன்னு வைங்க, இவங்கல்லாம் உடனே கடையை மாத்துவாங்களே தவிர, துணிப்பைக்கோ, சணல் பைக்கோ மாத்துவாங்கன்னு எல்லாம் எனக்குத் தோணலை’ என்றார். இதைக் கேட்டதும் கடைப்பையனுக்கு சட்டென முகம் வாடியது. அவன் பேச்சின்றி ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த பிளாஸ்டிக் பைகளில் ஒன்றை உருவி எனக்கான பொருட்களை அதில் கொட்டி என்னிடம் நீட்டினான்.