கமலா அடிக்கடி கண்ணாடி பார்த்து சலித்தவாறு இருந்தாள். சலிப்பென்றால் பெருங்கொண்ட சலிப்பு.
சற்றைக்கெல்லாம் ஆட்டோ வந்து விடும், அவள் புறப்பட்டாக வேண்டும். அக்கா காரோடு வந்து கொண்டிருப்பதாக அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். காரோ, ஆட்டோவோ எதுவானாலும் அவள் சீக்கிரமே புறப்பட்டுத் தான் தீர வேண்டும்.
பெரியவன் தினா டியூசனுக்குப் போயிருந்தான், சின்னவனுக்கு இந்த தை வந்தால் மூன்று வயது முடிகிறது, எந்தப் பள்ளியில் சேர்ப்பதென்று நினைத்த மாத்திரத்தில் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது, ஆனால் பொங்கி வழியக் காணோம், கண்ணில் நீர் வற்றிப் போயிற்றா என்ன!
அம்மா ஆதூரமாய் நெருங்கி வந்து,
"கமலி சீலயச் சுத்திக்கிறியாம்மா... நாழி ஆச்சு பாரு"
என்றாள் மிக மிக மிருதுவாய், எங்கே கூடக் கொஞ்சம் அழுத்திச் சொன்னால் மகளுக்கு வலிக்குமோ என்று அஞ்சுவதைப் போல! என்ன வலித்து என்ன?!
"சீலையெல்லாம் வேணாம்மா... இந்த நைட்டி போறும். இடுப்புல நிக்கான்டாமா சீலை? நழுவிண்டே இருக்கச்சே என்னத்துக்கு சீலையச் சுத்திண்டு!"
கை நடுங்க மகளைப் பார்வையால் அணைத்துக் கொண்ட அந்தம்மாள் மனசும் நடுங்கிப் போனவளாய் எதுவும் சொல்லாமல் பேசாது அவளையே பார்த்தவாறு இருந்தாள்.
கமலியின் புடவைக் கட்டு வெகு நேர்த்தி.
அந்தத் தெரு மொத்தமும் இளம்பெண்கள் அவளிடம் வந்து புடவை கட்டிக் கொண்டு போனதுண்டு. "கமலிக்கா மாதிரி எட்டு ப்ளீட்ஸ் வச்சு புடவை கட்டனும், விசிறி மாதிரி அழகா படிஞ்சு நிக்கணும் முன் கொசுவம். தம்பி மனைவியின் தங்கை ஆசை ஆசையாய் புடவையைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவாள் கமலியிடம்.
எந்நேரமும் வாகனம் வந்து விடும் அறிகுறிகள் இருந்தாலும் இன்னும் வரவில்லை தானே!
கமலி மீண்டும் சலித்துக் கொண்டு அந்த கனமான மரப்பீரோவில் பொருத்தப் பட்ட பெரிய பெல்ஜியம் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக் கொண்டாள், ஒரே நொடி தான், தனக்குத் தானே சகிக்க மாட்டாமல் முகம் சுணங்கி ஒதுங்கி மெல்ல நடந்து தூங்கிக் கொண்டிருந்த சின்னவனின் அருகே வந்தாள்.
மூணே வயசு தானே! பிஞ்சு பிஞ்சாய் ரப்பர் பந்து போன்ற கைகளும் கால்களும் "அம்மா என்னைக் கொஞ்சேன்" என்று உயிரை வதைத்தன. அவனைத் தொட்டு தூக்கி அணைத்து முத்தமிடும் ஆசையை வெகு பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டு ஏக்கத்தோடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க ஆரம்பித்தாள்.
கனத்த சிப்பி இமைகளுக்குள் குண்டு விழிகள் உருண்டன, பிள்ளை எதோ கனவு காண்கிறானோ! எழுந்து விட்டால் வம்பு!
அம்மா... இவன நீ நல்லா வளர்பியோன்னா! ரொம்பச் சமத்தும்மா! பெரியவனா அவன் அப்பா பாட்டி கிட்ட ஒப்படைச்சுடு, இவன நீ தான்... நீ தான் பார்த்துப்பியாம். கொஞ்சம் பேசினாலே கமலிக்கு மயக்கம் வரும் போலிருந்தது .
அம்மா கலங்கிப் போனவளாய் அவசர அவசரமாய் சத்தியம் செய்பவளைப் போல,
"சரிடிம்மா, சரிடிம்மா, எம் பேரன நான் வளர்ப்பேன்டி... ஒரு ராஜாவப் போல நான் வளர்ப்பேன், நீ கலங்காதடி என் சித்திரமே!"
மனம் அது பாட்டுக்கு எங்கெங்கோ சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.
போன் ஒலித்த சப்தம் கிணற்றுக்குள் இருந்து கேட்பதைப் போல கமலியின் காதுகளை உரசிச் சென்றது. அவள் அலட்டிக் கொள்ளாமல் எங்கோ பார்வையை நிலைக்க விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தாள்.
போனில் அழைத்தது கமலியின் கணவன் ராஜாராமன் தான், பாவம் கடந்த மூன்று மாதங்களாக நாய் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறான்.
என்ன பேசினானோ... மாமி மருமகனிடம் "தினாவையும் அழைச்சுண்டு போயிடலாமே, இவ அவனப் பார்க்காம தவிச்சிண்டில்ல இருக்கா" என்றாள் மெல்ல விசித்துக் கொண்டே.
போனை வைத்து விட்டு மகளிடம் வந்தவள்.
ஏண்டி குழந்தே ...சின்னவன எழுப்பித் தரட்டுமா, செத்த நேரம் விளாட்டு காட்றையா?
அவள் எதோ சம்பிரதாயத்துக்கு தன்னை சமாதனப் படுத்தத்தான் கேட்கிறாள் என்பதைப் போல "வேண்டாம் என" மெல்லக் கையசைத்தாள் கமலி .
கமலி உங்காத்துக்காரர் எவ்ளோ டிப் டாப்பா இருக்கார் பாரேன்,
அன்றைய கமலிக்கு இந்த வார்த்தைகள் கேட்ட மாத்திரத்தில் அத்தனை பரபரப்பாயிருக்கும். இப்போது நினைத்துப்பார்த்தால் "இருக்கட்டுமே...போ" என்பதான ஒரு அலட்சியம்!
கல்யாண ஆல்பத்தை திறந்து பார்த்து வருசத்திற்கு மேல் ஆகிறது.
அந்தக் கமலியா இந்தக் கமலி!
சின்னவனை கார்த்தால எழுப்பும் போதே கைல ஒரு முழு பிரிட்டானியா பிஸ்கட் பாக்கெட் வைச்சிண்டு தான் எழுப்பனும், இல்லேனா அழுது ஆகாத்தியம் பண்ணி ஊரைக் கூட்டுவான்.
தினாவுக்கு அடிக்கடி புழுத் தொல்லை வரும், சர்க்கரை டப்பாவ எடுத்து ஒளிச்சு வச்சிக்கணும். இனிப்புன்னா எறும்பா வாசம் பிடிச்சிண்டு அதி வேலையா தின்னு தீர்ப்பான். இந்த அம்மா தள்ளாத வயசுல என்னான்னு சமாளிப்பா!
ரெண்டையும் குளிக்கப் பண்றதுக்குள்ள போறும், போறும்னு ஆயிடுமே !
அவருக்கு ஓட்ஸ் கஞ்சியும், ஹார்லிக்சும் மட்டும் தான் கார்த்தால. ஒரு பொம்மனாட்டி வந்து சிசுருஷை பண்ணித் தான் தீரணும்னு இல்லை, அவர் கைலன்னா இருக்கு எம் புள்ளைங்களோட எதிர் காலம், இன்னொருத்தி வந்து தான் தீருவாளோ! நினைத்த மாத்திரத்தில் குடலைப் புரட்டிக் கொண்டு வாந்தி எடுக்கும் உணர்வு தலை தூக்க, தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டாள் கமலி.
"கமலிக்கா ஆத்துக்காரர் ஆள் ஜம்முன்னு இருக்கார்" பலர் பல நேரங்களில் காற்று வாக்கில் சொன்னதெல்லாம் இப்போது ஞாபகத்தில் உறுத்திக் கொண்டு பிராணனை வாங்குகிறதே!
பிராணன்... பிராணன்
எளவெடுத்த பெருமாளே! அந்தாளுக்கு ஏன் இம்புட்டு அழக கொடுத்த நீ? சனிக் கிழமை தவறாது இவள் விரதம் காத்த பெருமாளின் மேல் ஆத்திரம் திரும்பியது.
அக்கா காரோடு வந்து விட்டிருந்தாள்.
கமலியால் எட்டெடுத்து வைக்க முடியவில்லை.
கணவன் ஒரு புறமும், அக்கா மறு புறமுமாய் தாங்கி அவளை நடத்திக் கொண்டு போனார்கள் காருக்கு.
அம்மா முந்தானையில் வாய் பொத்தி சத்தமடக்கி தீவிரமாய் அழ தொடங்கி இருந்தாள்.
மெல்ல மெல்லப் புலன்கள் அடங்குவதான உணர்வு.
சுறு சுறுப்பாய் விழிகளைக் கூட அசைக்க இயலா மந்தகதி.
காருக்குள் நுழையும் முன்பே, இப்போது கேட்கா விட்டால் இனி எப்போது கேட்க என்று பரிதவிப்பவளைப் போல, கணவனின் கன்னம் தொட்டு திருப்பி, திணறலாய்...
"ஏன்னா, ஏம் பிள்ளைங்கள நன்னா பார்த்துக்குவேளோன்னா! நான் இல்லேன்னு இன்னொரு கல்யாணம் பண்ணிண்டு போய்டுவேளா?
கேட்ட மாத்திரத்தில் அவளது புறங்கையை கண்களுக்குள் அழுத்திக் கொண்டு ஹோவென கதறி விட்டான் ராஜாராமன்.
"அசடே... அசடே... ஏன்டீ... ஏன்டீ? இப்டி பேசி பிராணன வாங்கற? உனக்கு ஒன்னும் இல்லடீ. பார்த்துண்டே இரு, நீயும் நானும் சேர்ந்து சுபிட்சமா இருப்போம்டீ நூறாயுசுக்கு, ஒனக்கு ஒன்னும் இல்லடீ, நீ திரும்பி வருவடீ, நம்ம பிள்ளைங்கள நல்ல வளர்க்கத் தான் போறோம், அவன் அவளைக் கட்டிக் கொண்டு அழ!
சின்னவன் படுக்கையில் மெல்லப் புரண்டான், அக்கா கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெல்ல அதட்டினாள்.
‘கமலி உம் புள்ள முழிஞ்சிண்டா ஒன்ன விட மாட்டான்.’
‘எம் பிள்ளைங்க... ஏம் பிள்ளைங்க...’ விக்கி விக்கி அழ வேண்டும் போலான உணர்வு நெஞ்செலாம் நிரம்பித் ததும்ப கமலி தூங்கும் தன் மகனை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே காரில் ஏறினாள்.
கணையத்தில் வந்த கேன்சர் அவளை முக்காலும் தின்று முடித்த பின் தன் பிள்ளைகளின் ஏக்கத்தோடு கமலி காரில் போய்க் கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு வெகு நிச்சயமாய் தெரியும்.
ஆறு மாதங்களிலோ ஒரு வருடத்திலோ ராஜாராமன் மறுபடி மணமகன் ஆகலாம்.
கேன்சர் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என உணர்ந்து கொள்வதற்கு கிடைத்த நேரடி சாட்சி இந்தக் கமலி. வில்லிவாக்கத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டின் மாடியில் ஒரு கூட்டுக் குடும்பமிருந்தது. அதன் இளைய மருமகளை அந்தக் குடியிருப்பில் வசித்த அனைவருக்கும் மிகப்பிடிக்கும். ஒத்த வயது என்பதால் மட்டுமல்ல, அவளது பழகும் தன்மையாலும் கூட. அவளுக்கு மேலே கதையில் விவரித்திருப்பதைப் போலவே நண்டும், சிண்டுமாக இரண்டு மகன்கள். வீட்டுக்கு யார் வந்தாலும் சரி இன்முகத்துடன் வரவேற்று சாப்பிட ஏதாவது தந்து வெகு ப்ரியமாகப் பேசிக் கொண்டிருப்பாள் அந்த இளம்பெண். ஒருமுறை கோடை விடுமுறைக்காக நாங்கள் அம்மா வீட்டுக்குச் சென்று விட்டு ஒரு மாதம் கழித்து திரும்பி வந்து பார்த்தாள், அந்தப் பெண்ணைக் காணோம். கணவர் வளைகுடா நாடொன்றில் பணியிலிருந்ததால் குழந்தைகளுடன் அங்கே சென்றிருப்பார்களாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்... பிறகு குழந்தைக்கு எல்கேஜி அட்மிஷன், புத்தகங்கள், எனது வேலை, உறவில் நடந்த சில திருமண விழாக்கள் என பிஸியாக நாட்கள் கரைய 6 மாதங்களுக்கும் மேலாக அந்தப் பெண்ணைப் பற்றிய நினைப்பே இன்றி நாட்கள் ஓடியிருந்தன. திடீரென ஒரு நாள் நான் வீட்டிலிருக்கும் நாளாகப் பார்த்து, அவளது மாமியை பார்க்க வாய்த்ததில் அவர் ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார். அந்தப்பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பே பான்கிரியாட்டிக் கேன்சர் முற்றிய நிலையில் மிகவும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திடீரென இறந்து விட்டதாகக் கூறினார்கள்.
என்னால் இந்த தகவலை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
அதெப்படி இவளுக்குப் போய் கேன்சர் வரும் என்று திகைத்துப் போய் யோசித்துக் கொண்டிருந்தேன்... அந்த தாக்கத்தில் எழுதிய சிறுகதை இது.
பெண்கள் திருமணமாகி, குழந்தைகள் பெற்று விட்டால் பின்னர் தங்களது உடல்நிலை குறித்து அசட்டையாகி விடுகிறார்கள். அவர்களுக்கு எல்லாமும் கணவரும், குழந்தைகளும் மட்டுமே என்றாகி விடுகிறார்கள். இந்தப் பெண்ணின் விஷயத்திலும் கூட அது தான் நிகழ்ந்திருக்கிறது. கேன்சர் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு முற்றிய பிறகே அதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுவரையில் காய்ச்சல், தலைவலி, என்று வேறு வேறு சிகிச்சைகளில் நேரத்தை விரயம் செய்து கொண்டு அசட்டையாக விட்டதில் நோய் ஆளைச் சுருட்டி காவு வாங்கி விட்டது.
அதனால்... சொல்லத் தோன்றுகிறது.
திருமணமான பெண்களே! தயவு செய்து உங்களது உடல்நிலை குறித்து கவனமாக இருங்கள், உங்களுக்காகவும்... உங்கள் குடும்பத்தினருக்காகவும்!
Related Article
போதைகள் பலவிதம்... இதில் உங்கள் போதை எந்த விதமானது? கண்டுபிடிங்க பார்க்கலாம்!
‘டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்’ நமது இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது இத்தகைய மனிதர்களைத் தான்!
மோடியால் ஒரே நாளில் ஸ்டார் ஆன டீக்கடைக்காரர், இந்தியா ஒளிர்வது இப்படிப் பட்டவர்களால் தான்!
காதல், கலப்புத் திருமண விவகாரங்களில் பெற்றோர்கள் சார்பாக ஒரு வார்த்தை பேசினாலும் அது சாதி துவேஷமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


