கடந்த ஞாயிறு அன்று நானும் என் மகள்களும் மான்ஸ்டர் படம் பார்த்தோம். ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே சிரிப்பும், களிப்புமாக இருந்தது. ஒரு சண்டே இப்படிக் கழிவதில் யாருக்குத்தான் சந்தோசம் இருக்காது. அது முடிந்தது. நேற்றென்ன திங்கட்கிழமையா? மாலை வீடு திரும்பியதும் அக்கடா என்று தரையில் அமர்ந்தால் ஒரு கட்டெறும்பு சுவரோரமாக ஊர்ந்து வந்தது. எனக்கு அனிச்சை செயலாக எறும்புகள், சிறு வண்டுகளைக் கண்டால் போதும் கண்டமாத்திரத்தில் நசுக்கிக் கொல்லும் பழக்கம் உண்டு. காரணம் ஒருமுறை என் மகள் மூத்தவள் 3 வயது குழந்தையாக இருக்கும் போது எறும்பொன்று அவள் காதில் நுழைந்து பாடாய்ப்படுத்தி விட்டது. அப்போது அவளை வைத்துக் கொண்டு நட்ட நடு இரவில் ஹாஸ்பிடலுக்கு அலைந்து திண்டாடிய அவஸ்தையை இன்னும் மறக்க முடியாத காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என் குழந்தைகள் இருக்கும் இடத்தில் ஊர்வன எதைக்கண்டாலும் சரி உடனே கையால் அடித்தோ, காலால் நசுக்கியோ கொன்று போட்டால் தான் எனக்கு திருப்தி. இல்லாவிட்டால் நிம்மதி ஏது? என்ற நிலை.