முகநூலில் ஜன் ஒளஷாதி மருந்துக்கடையில் தனக்குத் தேவையான மருந்துகளை வாங்கியதில் தனக்கு கிடைத்த பலனைப் பற்றி ஒருவர் பகிர்ந்து கொண்டிருந்தார். அதில், தனியார் மருந்துக்கடைகளில் ரூ 500 க்கும் அதிகமாக செலவளித்து வாங்கக் கூடிய மருந்துகள் அனைத்தையும் மத்திய அரசின் நலத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் இந்த ஜன் ஒளஷாதி மருந்துக் கடைகளில் வாங்கும் போது வெறும் 60 ரூ தான் செலவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இத்தனை குறைவாக மத்திய அரசால் நாட்டு மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தர முடியுமெனில் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்பதைத் தாண்டி இந்த வகையான மருந்துக்கடைகளை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நிறுவாமல் நாடு முழுவதுமே வறுமைக்கோட்டுக்கு கீழான மக்கள் வாழும் பகுதிகள் அனைத்திலுமே இந்த திட்டத்தைப் பரவலாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளலாமே! ஏனெனில், இந்தியாவில் பணக்காரர்களை விட ஏழை மக்களின் குறிப்பாக வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் சதவிகிதம் தான் அதிகம் என்கையில் இந்தக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே இத்திட்டத்தால் நிஜமான பலன் கிடைக்கக் கூடும்.