சிலவருடங்களுக்கு முன் ஜனவரி 6 ஆம் தேதியை வேட்டி வாரமாக கொண்டாடலாம் என கோ ஆப்டெக்ஸ் முடிவு செய்தது. அதிலிருந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வேட்டி வாரம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 6 ல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மென்பொறியாளர்கள், வங்கி ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்த நாளில் வேட்டி உடுத்தி தங்களது அலுஅவலகம் மற்றும் பள்ளிகளுக்குச் சென்று வருவதை ஒரு குதூகலம் மிக்க நிகழ்வாகக் கருதுகிறார்கள். அப்படி கடந்த வெள்ளியன்று வேட்டி தினத்தில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வேட்டி உடுத்திக் கொண்டு பேருந்து நிலையம் வந்தவர்களில் சிலருக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன தெரியுமா? சென்னை தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டும் குபேந்திரன் என்பவர் வேட்டி கட்டிக் கொண்டு ஆட்டோவுக்காக காத்திருந்த சிலரை கட்டணம் எதுவுமின்றி இலவசமாக தனது ஷேர் ஆட்டோவில் சவாரி அழைத்துச் சென்றார்.