சிரியாவில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் போர் முற்றுகையிடப் பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப் படாமல் கிடைக்கும் போது, கிடைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு, ஆசிரியர்களும், பள்ளிகளும் அமைந்தால், அமையும் இடங்களில் கல்வி கற்றுக் கொண்டு, விளையாட எப்போதேனும் வாய்ப்புக் கிடைத்தால் அப்போது விளையாடிக் கொண்டு என ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம் எனும் பயங்கரமான சூழலில், போர் முற்றுகையின் கீழ் வாழும் அவலத்தை உலக நாடுகள் வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அவர்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்ய முன் வர வேண்டும் என யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் ஆண்ட்டனி லேக் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியாவில் போர் முற்றுகையின் கீழ் வாழும் குழந்தைகளுக்கு இயல்பு வாழ்க்கை என்பது மறுக்கப் பட்ட ஒன்றாக இருக்கிறது. பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் போரினால் உயிரிழப்பதும், படுகாயம் அடைவதும் அங்கு சகஜமானதாக இருக்கிறது. இது முற்றிலும் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு இழைக்கப் படும் அநீதி! சிரியாவில் தினம் தோறும் லட்சக் கணக்கான மக்கள் கொடுங்கனவுகளுடன் தான் உறங்கி விழிக்கிறார்கள். போரற்ற இயல்பு வாழ்க்கை என்பது அவர்களைப் பொறுத்தவரை பகல் கனவாகி விட்டது.
அவர்களது குழந்தைகள் அங்கே பசிக்கு உனவும், நோய்களுக்கு போதுமான மருந்துகளும் இன்றி வாடுகிறார்கள். துப்பாக்கிச் சூடுகள், குண்டு முழக்கங்கள் என்று பார்த்தும், கேட்டும் குழந்தைகளில் பெரும்பாலானோர் உளவியல் கோளாறுகளுடன், கொடுமையான பய உணர்வுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.