திருவண்ணாமலை மாவட்டம் போலுரைச் சேர்ந்த சத்யாவுக்கும் படாகத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் குமாருக்கும் திருமணமாகி இருவரும் மேல்மலையனூரில் வசித்து வந்தனர். சத்யா கருவுற்றதும் ஏழாம் மாதம் வளைகாப்பு நடத்தப்பட்டு தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டார். குமார் அவரால் முடிந்த போது மனைவியின் தாய் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து வந்தார். எல்லாம் சரியாகவே சென்று கொண்டிருந்த போது; கடந்த சில வாரங்களுக்கு முன் சத்யாவுக்கும் குமாருக்கும் இடையே ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டால் குமார், சத்யாவை அவரது தாய் வீட்டில் சென்று காண்பதும், அவரோடு பேசுவதும் நின்று போனது. இதற்கிடையே குழந்தைப்பேற்றுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. சத்யா தனது கணவரை சமாதானப் படுத்தி, குழந்தைப் பேற்றின் போது கணவர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார். கடந்த திங்களன்று கடைசியாக அவர் மருத்துவமனை பரிசோதனைக்குச் சென்ற போது மகப்பேறு மருத்துவர்கள் ‘குழந்தைப் பேற்றுக்கான வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம், சீக்கிரத்தில் நீ தாயாகப் போகிறாய். அதற்கான முன்னேற்பாடுகளுடன் தயாராக இரு” என்று அறிவுறுத்தியிருந்தனர். இதற்கு நடுவில் சத்யா நாள் நெருங்கி விட்டது, எப்படியாவது கணவரை தன்னுடன் அழைத்துச் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் போலூரில் அவரது தாய் வீட்டிலிருந்து கணவர் குமார் இருக்கும் சேத்பட்டுக்கு பேருந்தில் பயணித்தார்.