ராஜஸ்தான் ஆஜ்மீரைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞர் அல்கா மாத்தூர் தன்னுடைய பிரத்யேக கலைத்திறன் பற்றி என்ன சொல்றாங்க தெரியுமா? கலைகளின் பிறப்பிடமான வண்ணமயமான ராஜஸ்தானைச் சேர்ந்த தனக்கு அடிப்படையில் கலைகளின் மீதான ஆர்வம் இயல்பிலேயே இருந்தது என்றும் அதற்கான உந்துதலை நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு உள்ளிட்ட பஞ்ச பூதங்களான இயற்கை சக்திகளிடம் இருந்தே தான் பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர் எங்கு பயணம் மேற்கொண்டாலும் சரி; அது கார் ஆகட்டும், ரயிலாகட்டும், விமானமாகட்டும் எதில் பயணித்தாலும் ஜன்னலை மூடிக் கொண்டு அப்படியே தூங்கி விடுவதில்லையாம். ஜன்னல்களை எப்போதும் விரியத் திறந்து வைத்து அதன் வழியாக தன்னைக் கடந்து செல்லும் விரிந்து பரந்த இந்த உலகத்தை ரசனையோடு பார்த்து ரசித்து அதை அப்படியே அழகான ஓவியங்களாக்கி விடுவதில் வல்லவராம். இந்த ஓவிய ரசனை தான் இவரை தனது கலைத் திறனில் அடுத்தடுத்த படிகளை நோக்கி நடத்திக் கொண்டு செல்கிறதென்று அவர் கூறுகிறார்.