/

மார்கழி மாதத்தில் கோலம் போடுபவர்கள் கவனிக்க!

மார்கழி மாதத்தில் கோலம் போடுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

News image
மார்கழி மாதக் கோலம்
Updated On :9 ஜனவரி 2026, 7:16 am

இணையதளச் செய்திப் பிரிவு

மார்கழி மாதத்தில் கோலம் போடுபவர்களும், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலம் போடத் தயாராகி வருபவர்களுக்கும் ஒருசில எளிய குறிப்புகள்..

சிமென்ட் தரையாக இருந்தால், வாசலை தண்ணீரால் கழுவி சில நிமிடங்களுக்குப் பிறகு தான் கோலம் போட வேண்டும். தண்ணீர் அப்படியே இருக்கும்போது போடக்கூடாது.

மண் தரையாக இருந்தால் முதலில் பெருக்கி பிறகு நீர் தெளித்து கோலம் போட வேண்டும். தரைக்கு ஏற்றவாறு நீர் தெளிக்க வேண்டும். காய்ந்த தரையில் கோலம் போடக் கூடாது. காற்றில் கலைந்துவிடும்.

கோலப்பொடியுடன் பச்சரிசி மாவைக் கலந்து கொண்டால் கோலம் பளிச் என்று இருப்பதுடன் கோலப்பொடியும் அதிகரிக்கும். எரும்புகளுக்கும் உணவாகும்.

கோலப்பொடி வாங்கும்போது வெளுப்பு அதிகமுள்ள பொடியைப் பார்த்து வாங்குவது நல்லது. சில கோலப்பொடி மக்கலாக இருக்கும். அதில் கோலம் போட்டால் பளிச்சென்று இருக்காது.

கோலத்தை சுற்றி செம்மண் அல்லது காவி கரை கட்டினால் கோலம் பார்க்க மிக அழகாக இருக்கும்.

வாசலில் வண்ணக் கோலங்கள் போடும்போது சலித்த மணலுடன், வண்ணப் பொடிகளை கலந்தால் நிறம் எடுப்பாக தெரியும்.

மாக்கோலம் போடும்போது பச்சரிசி மாவோடு சிறிது மைதா மாவு சேர்த்தால் கோலம் சீக்கிரம் அழியாது.

புள்ளியில்லாமல் கோலம் போடும்போது முதலில் ஒரு புள்ளியை மையமாக வைத்து அதைச்சுற்றி கோலத்தை விரிவாக்க வேண்டும்.

கோலப்பொடியால் கோலமிடும்போது தரை சற்று ஈரமாகவும், மாக்கோலமானால் ஈரம் காய்ந்த பின்பும் கோலமிட வேண்டும்.

வெள்ளை நிற டைல்ஸில் தரை இருந்தால் கோலமிடும் முன் செம்மண்ணால் மெழுகி விட்டு அதன்மேல் கோலமிட்டால் பளிச்சென்று தெரியும்.

- எஸ்.சரோஜா

Attention those who apply kolam in the month of Margazhi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.