/

காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!

திவ்ய பிரபந்தம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மன அமைதி இழக்கும் நிலை ஏற்பட்டது.

News image
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மண்டகப்படியின் போது திவ்ய பிரபந்தம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் வாக்குவாதம்
Updated On :10 ஜனவரி 2025, 4:21 am

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மண்டகப்படியின் போது திவ்ய பிரபந்தம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மன அமைதி இழக்கும் நிலை ஏற்பட்டது.

வைணவ திவ்ய தேசங்கள் உள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அஷ்டபுஜம் பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பல திருக்கோவில்கள் அமைந்துள்ளது.

பல ஆண்டு காலமாக முக்கிய திருவிழா காலங்களில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர்களிடையே திவ்ய பிரபந்தங்கள் பாடுவதில் பெரும் வாக்குவாதம் ஏற்படுவதோடு மோதல் ஏற்படும் சூழலும் நிலவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு விழாக்காலங்களிலும் இதுபோன்ற பிரச்னைகள் எழுவதும் பின்னர் காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறையினர் சமரசம் செய்து வைப்பதும் அதன் பின்னர் சாமி புறப்பாடு ஊர்வலம் என நடைபெறுவதும் வழக்கமாகி வருகிறது.

வடகலை-தென்கலை பிரிவினர்களிடையே நிலவும் பிரச்னையில் மன அமைதிக்காகவும் இறையருள் பெறுவதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் இருதரப்பினரிடையே ஏற்படும் வாக்குவாதத்தை கண்டு மிகுந்த மனம் வருத்தம் அடைகின்றனர்.

இந்த நிலையில், ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி சில நிமிடங்களுக்கு முன்பு திவ்ய பிரபந்தம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறையினரும் அறநிலையத்துறையினரும் சமரசம் செய்து கொண்டிருக்கும் போதே இரு பிரிவினரும் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்ததால் பிரச்னை தொடர்ந்ததால், உடனடியாக அனைவரும் பாடிவிட்டு வெளியே செல்லுமாறும்,பக்தர்கள் நீண்ட நேரமாக சாமி தரிசனத்திற்கு காத்திருக்கிறார்கள் என கூறி அனைவரையும் மெல்ல வெளியேற்றினர்.

காஞ்சியில் திவ்ய பிரபந்தம் பாடுவதில் இருதரப்பினருக்கிடையே ஏற்படும் பிரச்னை தீராத பிரச்னையாக அவ்வப்போது எழுவதும் ஒவ்வொரு நாளும் இதனை சமாதானம் செய்வது என்பது அனைத்து தரப்பினரிடையே பெரும் சங்கடங்களை உருவாக்கி வருகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படும் பிரச்னை கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே முகம் சுழிக்க வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.