ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தாயக் கட்டைகளுக்குக் கிடைத்த வாழ்வு; விறுவிறு விற்பனை!

சொன்னால் நம்ப மாட்டீர்கள், சென்னை மா...நகரில் முன்னெப்போதுமில்லாத அளவுக்குத் தற்போது பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன தாயக் கட்டைகள்!

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:23 pm

ததாகத்


சொன்னால் நம்ப மாட்டீர்கள், சென்னை மா...நகரில் முன்னெப்போதுமில்லாத அளவுக்குத் தற்போது பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன தாயக் கட்டைகள்!

ஒரு காலத்தில் வீட்டில் இருப்போரின் மிக முக்கிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருந்தது தாயம் உருட்டுவது.

தாயக் கட்டங்கள், பரமபதம், பல்லாங்குழி ஆகிய அனைத்தையும் விளையாட தாயக் கட்டைகளை உருட்ட வேண்டும்  அல்லது சோழிகளைக் குலுக்கிரப் போட வேண்டும். அவற்றில் விழும் எண்களைப் பொருத்து ஏற்ற, இறக்கங்களும் காய் நகர்த்தல்களும் இருக்கும். இருவரும் ஆடலாம், நால்வரும் ஆடலாம். இறுதியில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.

தொலைக்காட்சித் தொடர்கள், தொடர்ந்து செல்லிடப் பேசிகள் எல்லாம் வந்ததும் தாயக் கட்டைகளைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட யாருமில்லாமல் போய்விட்டிருந்தது.

சென்னை மாநகரைப் பொருத்தவரை நாட்டு மருந்துக் கடைகளில்தான் பெரும்பாலும் இந்தத் தாயக் கட்டைகள் விற்கப்படுகின்றன. காலமாற்றத்தில் சில பேன்ஸி கடைகளிலும் விற்கப்படுவதுண்டு.

கடைகளில் மிகக் குறைந்த அளவில் வைக்கப்பட்டிருந்தாலும் மிக அபூர்வமாகத்தான், மிகக் குறைந்த அளவுக்குத்தான் தாய கட்டைகள் விற்பனையாகும்.

தாயக் கட்டைகள் பெரும்பாலும் வெள்ளி, பித்தளை, இரும்பு மற்றும் மரத் துண்டுகளில் செய்யப்பட்டிருக்கும். இவற்றுக்கான தேவைகள் மிகவும் குறைந்துவிடவே இப்போதெல்லாம்  இரும்பில் மட்டும்தான் வருகின்றன.

கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் இவ்வேளையில் திடீரென தாயக் கட்டைகளின் விற்பனை சூடுபிடித்திருக்கிறது.

நன்றாக விற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே சாதாரணமாக மாதத்துக்கு 10 எண்ணங்கள்தான் விற்கும். வைகுண்ட ஏகாதசியின்போது மட்டும் 100 வரை விற்கும்.  ஆனால், இந்த விற்பனையெல்லாமும்கூட கடந்த இரு ஆண்டுகளாக இல்லை.

ஆனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து விற்கத் தொடங்கிய தாயக் கட்டைகள் இப்போது மிக நன்றாக விற்கின்றன. இரு ஆண்டுகளாக விற்காமல் கையிலிருந்த சரக்குகள் எல்லாம்கூடத் தீர்ந்துவிட்டன என்கிறார் அயனாவரத்தில் மருந்து விற்பனைக் கடை வைத்திருக்கும் ஆர். சம்பங்கி.

முன்னர் விலை சற்றுக் குறைவு. இப்போது தேவை அதிகமாகியிருக்கும் நிலையில், ரூ. 30, ரூ. 25, ரூ. 15 விலைகளில் தாயக் கட்டைகள் கிடைக்கின்றன. ஒரு நாளில் 20-லிருந்து 30 வரை தாயக் கட்டைகள் விற்கின்றன. ஆனால், பரமபத படத் தாள்கள் அவ்வளவாக விற்கவில்லை என்கிறார் அவர்.

இது தவிர, கரோனா காலம் என்பதால் மருந்துக் கடையில் கபசுரக் குடிநீர்ப் பொடி நிறைய விற்பதாகவும் குறிப்பிடுகிறார் சம்பங்கி.

கரோனாவால் நேரிட்ட எத்தனையோ துன்ப துயரங்களுக்கு நடுவே இப்படியும் ஒரு சேதி!

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.