தனியார் செய்தி தொலைக்காட்சியொன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தேமுதிக முன்னாள் எம் எல் ஏ சந்திரகுமார், தேமுதிக பொருளாளரும், கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா குறித்துப் பகிர்ந்து கொண்ட தகவல் அரசியல் நாகரீகம் குறித்துப் பேசுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேர்காணலில் நெறியாளர், சந்திரகுமாரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். அதாவது இரு நாட்களுக்கு முன்பு தேமுதிக ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரேமலதா அங்கிருந்த நிருபர்களையும், பத்திரிகையாளர்களையும் ஒருமையில் ஏகவசனத்தில் அழைத்துப் பதில் கூறிக் கொண்டார். இது குறித்து பத்திரிகையாளர்கள் அப்போதோ கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். அதையொட்டிய கேள்வியொன்று நேற்று முன்னாள் தேமுதிக எம் எல் ஏ சந்திரகுமாரிடம் கேட்கப்பட்டது. பிரேமலதா திடீரென்று இப்படி யாரையும் ஏக வசனத்தில் அழைக்க முடியாது இல்லையா? அவர் கட்சிக்காரர்களை எவ்விதமாக அணுகுவார்? கட்சிக்காரர்களுக்கு தேமுதிக அலுவலகத்திலும் விஜயகாந்த் வீட்டிலும் மரியாதை அளிக்கப்படுமா? அல்லது செய்தியாளர் சந்திப்பில் பேசியதைப் போல ஏக வசனத்தில் தான் எல்லோரையும் அழைப்பாரா பிரேமலதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.