மும்பை பாரெல்லி அரசு மருத்துவமனையொன்றில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார் அரவிந்த். கடந்த வியாழனன்று தனது இரவுப் பணி நேரத்தில் எமர்ஜென்ஸி மெடிக்கல் ஆஃபீஸர் (EMO) என்று குறிப்பிடப்படக்கூடிய டியூட்டி மருத்துவரின் அறையில் மருத்துவர் இல்லாத நிலையில் அங்கே இரவு நேரத் துப்புரவுப் பணிக்காக நுழைந்த அரவிந்த். டாக்டரின் மேஜையில் அவரைத் தவிர அவரது ஸ்டெதஸ்கோப், டாக்டருக்கான கோட் எல்லாம் இருப்பதைக் கண்டார். அட, டாக்டர் தான் இல்லையே, நாமும் தான் ஒருநாள் இதையெல்லாம் போட்டுப் பார்த்து டாக்டராக ஆனால் என்ன? என்ற நப்பாசையில் உடனே யோசிக்காமல் டாக்டரின் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டதோடு ஸ்டெதஸ் கோப்பையும் கழுத்தைச் சுற்றி மாலையாகப் போட்டுக் கொண்டுள்ளார். அதோடு நிறுத்தியிருந்தால் தேவலாம். ஆனால், அப்படி விட்டுவிட விருப்பமின்றி. டாக்டரின் இருக்கையிலும் அமர்ந்து அதை சக துப்புரவுப் பணியாளரான மற்றொருவர் துணையுடன் புகைப்படமெடுத்து தனது முகநூல், வாட்ஸ் அப் வழியாக நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மருத்துவமனையின் சக பணியாளர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். அரவிந்த் பகிர்ந்து கொண்ட புகைப்படம் சக மருத்துவரான ஹரிஷ் சந்திரா மூலமாக மருத்துவமனையின் டீன் பார்வைக்கும் சென்றுள்ளது. சமூக ஊடகங்களில் இப்படியொரு புகைப்படம் பலருக்கும் பகிரப்பட்டால் தனது தலைமையின் கீழுள்ள மருத்துவமனை மற்றும், மருத்துவர்களின் நற்பெயருக்குக் களங்க என உணர்ந்து கொண்ட டீன் உடனடியாக மறுநாளே விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட துப்புரவுப் பணியாளரை பணி நீக்கம் செய்ததோடு, இது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.