/

உங்களுக்குத் தான் பதவி ஆசை இல்லையே, நல்லகண்ணு அய்யாவை முதலமைச்சர் ஆக்குவீர்களா? திருமுருகன் காந்தியின் காட்டமான கேள்வி!

உங்களுக்குப் பதவி ஆசை இல்லையில்லை, அப்படியானால் நல்லகண்ணு அய்யாவை முதலமைச்சர் ஆக்குங்கள். அவர் வெள்ளைக்காரனை எதிர்த்தும் போராடினார், கொள்ளைக்காரனை எதிர்த்தும் போராடினார்.

News image
Updated On :22 ஜூலை 2025, 10:30 am

RKV

ரஜினியின் அரசியல் பிரவேஷம் குறித்து மே 17 இயக்கத் தலைவரான திருமுருகன் காந்தியிடம் சில கேள்விகளை முன் வைத்தது பிரபல சமூக இணையதள ஊடகம் ஒன்று. நீளமான அந்த நேர்காணலில் ரஜினியிடம் அவர் சீற்றத்துடன் முன் வைத்த முதல் கேள்வியே இன்றைய இளையதலைமுறையினரைச் சிந்திக்க வைப்பதாக இருப்பதால் அந்தக் கேள்வியை இங்கே வாசகர்கள் முன் வைக்கிறோம்.

ரஜினியிடம் திருமுருகன் காந்தியின் காட்டமான கேள்வி...

‘பாஜகவின் ‘பி’ டீம் தான் ரஜினிகாந்த். அதன் ஸ்லீப்பர் செல் தான் கமலஹாஸன். அதில் எந்த இடத்திலும் சந்தேகமே தேவையே இல்லை. ஆன்மீக அரசியலென்றால் என்ன செய்ய வேண்டும்? எல்லோருமே கருப்பு வேஷ்டியும், காவி வேஷ்டியும் அணிந்து கொண்டு சுற்ற வேண்டும் என்கிறாரா? அல்லது எல்லோரும் விபூதி அணிந்து கொண்டு, நாமம் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்கிறாரா? அல்லது பசுமாட்டின் சிறுநீரை (கோமியம்) குடித்துக் கொண்டு சுற்ற வேண்டும் என்கிறாரா? அது என்னங்க ஆன்மீக அரசியல்?

போராட்டங்கள் நடத்துவது எங்கள் வேலையில்லை. அதைக்குறித்த கருத்துகளை மக்களிடம் சொல்ல அறிக்கைகள் வெளியிடுவது எங்கள் வேலை இல்லை. அதையெல்லாம் வேறு யாராவது செய்து கொள்வார்கள். நாங்கள், எங்கள் படத்தை மட்டும் எடுத்து 300, 400 கோடிக்குச் சம்பாதித்துக் கொண்டு நாங்கள் போவோம். எவ்வளவு திமிரான பேச்சு இது? போராட்டம் நடத்துபவர்கள் எல்லாம் என்ன மட்டமான ஆட்களா? வேலையில்லாமல் உட்கார்ந்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்களா?

நீங்கள் உட்கார்ந்து கொண்டு ஒரு திரைப்படத்தில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்த போது போராட்டக்காரர்கள் விவசாயிகள் பிரச்னைகளுக்காக அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்கிற காரணத்துக்காக தெருவில் நின்று போராடிச் சண்டையிட்டு சிறைக்குச் சென்றார்கள். மீனவர்கள் வந்தார்களா? பிழைத்தார்களா?, செத்தார்களா? என்று தெரியாமல் அவர்களது குடும்பங்கள் எல்லாம் சாலையில் நின்று போராடினார்கள். அது நடந்த போதெல்லாம் உட்கார்ந்து சினிமாவில் சம்பாதிக்கக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்த நீங்கள் வந்து இப்போது போராடுவது வேறு ஒருவருடைய வேலை என்று சொல்வீர்கள் என்றால் நீங்கள் யார்?

Story image

உங்களுக்குப் பதவி ஆசை இல்லையில்லை, அப்படியானால் நல்லகண்ணு அய்யாவை முதலமைச்சர் ஆக்குங்கள். அவர் வெள்ளைக்காரனை எதிர்த்தும் போராடினார், கொள்ளைக்காரனை எதிர்த்தும் போராடினார். எளிமையான மனிதர். பிறரைப் போல ஊழல் செய்தவர் இல்லை. பிளாக் டிக்கெட் விற்றுச் சம்பாதித்தவர் கிடையாது. மக்களை உணர்வுப் பூர்வமாகச் சுரண்டியவர் கிடையாது. மக்களுடன் போராட்டத்தில் நிற்கக் கூடிய ஒரு மனிதர். சரி உங்களுக்குத்தான் பதவி ஆசை இல்லை அல்லவா? நல்லகண்ணு அய்யாவை முதலமைச்சர் ஆக்குங்கள்.’

Question portion courtesy: Redpix.com.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.