சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது. 2014 ஆம் ஆண்டில் இதற்கான முன்முயற்சியை மேற்கொண்டவர் பாரதப் பிரதமர் மோடி. ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டமைப்பில் யோகாவின் முக்கியத்துவத்தைக் குறித்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் மோடி தனது முதல் உரையை நிகழ்த்தினார். உலகில் பயங்கரவாதத்தை ஒழிக்க சட்டங்களும், தண்டனைகளும் மட்டும் போதாது. மனிதர்களை மனம், உடல், சிந்தனை வாயிலாக நல்வழிப்படுத்த யோகா போன்ற பயிற்சிகளும் வேண்டும், அந்த வகையில் யோகா இந்தியா உலகுக்கு அளித்த நற்கொடையாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட மேன்மை வாய்ந்த யோகப் பயிற்சிகளை உலக மக்களிடையே பரவலாக அறிமுகப்படுத்தி யோகக் கலையை வளர்க்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் நாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என மோடி கோரிக்கை வைத்தார். ஜூன் 21 ஆம் நாள் போமியின் வடபகுதியில் உள்ள நாடுகளில் மிக நீண்ட பகலையும், தென்பகுதியில் உள்ள நாடுகளுக்கு மிக நீண்ட இரவுப் பொழுதையும் கொண்ட நாள் என்பதால் அந்த நாளை உலக யோகா தினத்தைக் கொண்டாட சிறந்த நாளாகத் தேர்வு செய்து ஐக்கிய நாடுகள் சபையில் பரிந்துரைத்தார் மோடி. அதனடிப்படையில் 2015 ஆம் ஆண்டு முதல் ‘சர்வதேச யோகா தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று இந்தியாவில் சிறப்புற கொண்டாடப் பட்டு வருகிறது. நாடு முழுவதும் பிரதமர் மோடி உட்பட அரசியல், சமூக, கலைத்துறை பிரமுகர்கள் அனைவரும் யோகப் பயிற்சிகளில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு யோகப் பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.