நமது அண்டை மாநிலங்களிலும் இது போன்ற போராட்டங்கள் வெடித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சூழ்நிலைகள் பலமுறை நிகழ்ந்துள்ளது. அப்போதெல்லாம் அங்கு வன்முறையும், அடக்குமுறையும் கூட சரி பங்கு வகித்தது. அவற்றோடு ஒப்பு நோக்கும் போது தமிழகத்தில் இன்று ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகத் திரண்ட வரலாறு காணாத மாபெரும் கட்டுக்கோப்பான பெருங்கூட்டத்தை போன்றதொரு கண்ணியமான போராட்ட களத்தை மொத்த இந்தியாவிலும் இதுவரை எவரும் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பிற அனைத்திலுமே ஏதாவது ஒரு வகையில் அரசியல்வாதிகள், மற்றும், சினிமாக்காரர்களின் தலையீடும், அதனால் போராட்ட இடங்கள் ரத்தக் களறியான சம்பவங்களும் இடம் பெற்றிருக்கும், எல்லாவற்றையும் விட பெண்களின் பங்களிப்பு என்பது அங்கெலாம் மிகக் குறைவாகவே இருக்கும். குழந்தைகளைப் போராட்டக் களங்களில் காண்பது என்பது அதை விட அரிதானது. ஆனால் இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து குடும்பங்களுமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாணவப் போராட்டத்தில் தங்களது பங்களிப்பை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதன் வெளிப்பாடு தான் இப்போது போராட்டக் களங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பெருந்திரளான பெண்கள் கூட்டம்.