மாணவர்களின் கோரிக்கை நியாயமானது தான். ஏனெனில் பீட்டா அமைப்பினரும் அப்படித் தான் அறிவித்திருக்கிறார்கள். மாநில அரசோ, மத்திய அரசோ அவசரச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு தடை நீங்கினாலும் ஜல்லிக்கட்டு தடைக்காக நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஜல்லிக்கட்டு ‘மிருகவதை’ தான். அது விளையாட்டு இல்லை என்பதாக அவர்கள் இன்று மொத்த மாநிலத்தின் உணர்வுகளையும் பொருட்டாகக் கருதாமல் ஊடகங்களில் பதில் அளித்து வருகிறார்கள். ஆகவே இந்த பீட்டா அமைப்பினரை தமிழகத்தில் முதலில் தடை செய்ய வேண்டும் என்பதும் மாணவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக வலுப்பட்டிருக்கிறது. பீட்டாவைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டு மக்களான எங்களது பாரம்பரிய விளையாட்டை அதன் நோக்கத்தையும், அர்த்தத்தையும் திரித்து உச்சநீதிமன்றத்தில் வழக்காடி மிருகவதை என்று சாதித்து தடை செய்ய அவர்கள் யார்? மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும், மத்திய அரசு அதை ஏற்பதாக பாவனை காட்டும். பீட்டா அமைப்பினர் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்காடுவார்கள். இன்று மாணவப் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டி ஆளும் கட்சியும், தமிழக முதல்வரும் இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முயன்றால் மட்டும் போதாது. எங்களுக்கு ஜல்லிக்கட்டு தடை விசயத்தில் நிரந்தரத் தீர்வு கண்டிப்பாக வேண்டும். அது வரை எங்களது போராட்டம் தொடரும் என ஒருமித்த குரலாக மாணவ, மாணவிகள், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கு கொண்டிருக்கும் குடும்பத் தலைவிகள் உட்பட அனைவருமே ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். போராட்டத்தின் முக்கிய குறிக்கோளாக நிபந்தனையற்ற நிரந்தரத் தீர்வு முன்வைக்கப் பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளோடு உச்சநீதிமன்றத்தின் பங்கும் இதில் இருப்பதால் ஜல்லிக்கட்டு விசயத்தில் அடுத்து என்ன நிகழவிருக்கிறது என்பதை பொறுத்திருந்து காணலாம்.