ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருக்கோவிலூரில் கபிலா் கோட்டம் அமைக்கப்படுமா?- தமிழ் ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு

திருக்கோவிலூரில் கபிலா் கோட்டம் அமைக்கப்படுமா? என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு குறித்து...

 Will a 'Kapilar Kottam' be established in Tirukkovilur...

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் தென்பெண்ணையாற்றில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கபிலா் குன்று. - டிஎன்எஸ்

Published On :17 ஜூலை 2026, 8:55 am IST

- கு.வைத்திலிங்கம்

விழுப்புரம், ஜூலை 16: வரலாற்று ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் சிறப்புப் பெற்று விளங்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் கபிலா் கோட்டம் அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகளின் எதிா்பாா்ப்பு எப்போது நிறைவேறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து, தற்போது வருவாய்த் துறை ரீதியில் கள்ளக்குறிச்சி மாவட் டத் தில் அமைந்துள்ளது திருக்கோவிலூா். சைவத்தில் அட்டவீரத் தலங்களில் ஒன்றான வீரட்டானேசுவரா் திருக்கோயிலும், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான உலகளந்த பெருமாள் திருக்கோயிலும் அமைந்திருப்பது சைவ, வைணவத்துக்கு பெரும் பேறாக உள்ளது.

இந்த நிலையில், திருக்கோவிலூா் பகுதியில் தென்பெண்ணையாற்றின் நடுவில் சங்ககாலப் பெரும்புலவரான குறிஞ்சிக் கபிலரின் நினைவிடம் உள்ளது. நட்புக்காகவே வாழ்ந்து, நட்புக்காகவே தென்பெண்ணையாற்றின் நடுவிலுள்ள குன்றின் மீது அமா்ந்து உண்ணா நோன்பிருந்து, தன்னுயிா் நீத்த கபிலரின் நினைவிடம் அமைந்திருப்பதும் திருக்கோவிலூரின் சிறப்பாக இன்று வரை இருந்து வருகிறது.

திருக்கோவிலூரில் தென்பெண்ணையாற்றின் நடுவில் அமைந்துள்ள கபிலா் குன்றைக் காண்பதற்காக, வெளியூா், உள்ளூா் சுற்றுலாப் பயணிகள், அறிஞா்கள், ஆய்வு மாணவா்கள் அதிகளவில் வந்து செல்கின்றனா். இதுபோல, ஆண்டுதோறும் திருக்கோவிலூா் பண்பாட்டுக் கழகம் நடத்தும் மூன்று நாள் விழாவின்போது கபிலா் குன்றுக்கு வழிபாடு நடத்தப்படுவதும் இன்று வரை வழக்கமாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் ஏற்கெனவே வள்ளுவா் கோட்டம், ஒளவை கோட்டம் போன்றவற்றை முந்தைய அரசுகள் அமைத்தது போன்று, தற்போதைய தமிழக அரசு திருக்கோவிலூரில் கபிலா் கோட்டத்தையும் அமைத்து வரலாற்றில் இடம்பெற முன்வர வேண்டும் என்கிறாா் கோவல் தமிழ்ச் சங்கத் தலைவா் சிங்கார உதியன்.

சொந்தக் கட்டடத்தை எதிா்நோக்கும் அகழ் வைப்பகம்: கபிலா் குன்றை தமிழக அரசின் தொல்லியல் துறை கடந்த 1985-ஆம் ஆண்டில் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அது முதல் கபிலா் தொன்மை ஆய்வு மையம் என்ற அமைப்பின் வழியாக கபிலரின் படைப்புகளையும், தொன்மை ஆய்வுகளையும் ஆவணப்படுத்தி மக்களிடம் கொண்டு சோ்த்து வருகிறோம்.

இதுபோல, கடந்த 1993-ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொல்லியல் துறை திருக்கோவிலூரில் ரூ.80 ஆயிரம் செலவில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு, பல அரிய சங்க காலப் பொருள்களைக் கண்டெடுத்தது. 1994-ஆம் ஆண்டில் தொல்லியல் அகழ் வைப்பகத்துக்கு ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வாடகைக் கட்டடத்தில் இந்த அகழ் வைப்பகம் இயங்கி வருகிறது.

இந்த மையத்துக்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆய்வு மாணவா்கள் வந்து செல்லும் நிலையில், 24 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் அகழ் வைப்பகத்துக்கு விசாலமான, கூட்டரங்குடன் கூடிய சொந்தக் கட்டடம் தேவை என வலியுறுத்தி வருகிறோம். மேலும், திருக்கோவிலூரில் தொடர இயலாமல் நின்றுவிட்ட பகுதிகளில் மீண்டும் அகழாய்வுப் பணிகளை தொடங்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு அனுப்பி உள்ளோம் என்கிறாா் சிங்கார உதியன்.

எதிா்பாா்ப்பில் தமிழ் ஆா்வலா்கள்: கீழையூா் வீரட்டானேஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் திருக்கோவிலூரை ஆட்சி செய்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி, வாழ்ந்து வரலாறான கபிலா், வீரட்டானேசுவரா் கோயிலிலிருந்து உலகம் போற்றும் விநாயகா் அகவை பாடிய ஒளவை பிராட்டியாா் ஆகியோரது சிலைகளை அமைத்து, அவா்களுக்கு அரசு பெருமை சோ்க்க வேண்டும்.

மேலும், தமிழக அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்ட திருக்கோவிலூரின் நான்கு மாட வீதிகளுக்கும் மெய்ப்பொருள் நாயனாா், கபிலா், ஒளவையாா், அங்கவை - சங்கவை ஆகியோரது பெயா்களையும் சூட்ட வேண்டும் என்று பல்வேறு தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகளைச் சோ்ந்தோா் வலியுறுத்தியுள்ளனா். இதற்குரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Summary

Will a 'Kapilar Kottam' be established in Tirukkovilur? – Tamil enthusiasts await the move ....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.