/

சீன அதிபரின் பதவி காலம் நீட்டிப்பு: அஞ்சுகிறதா இந்தியா?

சீன நாடாளுமன்றத்தில் நேற்று 2 முறைக்கு மேல் சீன அதிபர் பதவியில் ஒருவர் நீடிக்க முடியாது என்ற விதி முறையை நீக்கி

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:27 pm

திருமலை சோமு

சீன நாடாளுமன்றத்தில் நேற்று 2 முறைக்கு மேல் சீன அதிபர் பதவியில் ஒருவர் நீடிக்க முடியாது என்ற விதி முறையை நீக்கி  வரலாற்று சிறப்புமிக்க சட்ட திருத்த மசோதா ஒன்று நேற்று நிறைவேற்றப்பட்டது.  அதன்படி தற்போதைய அதிபர் ஜீ ஜின் பிங் மீண்டும் அதிபராகும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

சீனாவின் அதிபராக, ஜி ஜின்பிங், 64, இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். சீன அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி, ஒருவர், இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது. சீனாவில் ஆட்சி புரியும் ஒரே அரசியல் கட்சியான, சி.பி.சி., எனப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், ராணுவத்தின் தலைவர், அதிபர் என, ஒரே நேரத்தில் மூன்று பதவிகளையும், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார், ஜின்பிங்.

சீனா கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர், மாவோ ஜெடாங்குக்குப் பின், சீனாவின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக, ஜின்பிங் உள்ளார். கட்சி மற்றும் ராணுவத்தை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ள, ஜின்பிங், அதிபர் பதவியில் நிரந்தரமாக தொடர விரும்பினார்.அதற்காக, அதிபர் பதவிக்கு உள்ள கால நிர்ணயத்தை நீக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த சட்ட திருத்த மசோதா நேற்று பெய்ஜிங்கில் தேசிய மக்கள் காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்டது. இது கூட்டு தலைமைத்துவ அமைப்பை திறம்பட முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. இது உலக அரங்கில்  ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் இந்தியாவுக்கு கூடுதலாகவே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.  

ஏற்கனவே, நம் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. எல்லைப் பிரச்னைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மற்ற அண்டை நாடுகள் உதவியுடன், நம் நாட்டுக்கு பிரச்னை ஏற்படுத்தும் முயற்சியில், சீனா ஈடுபட்டுள்ளது; இனி அது தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது.

எல்லை பிரச்னை காரணமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 1962 ல் போர் நடந்தது. எனினும் இன்றும்  இருநாடுகளுக்கும்  இடையே  எல்லைப் பிரச்னை நீடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

கடந்த 2003ம் ஆண்டில் இருதரப்பினரும் 20 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சக்தி வாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பின் இனி இந்தியாவுக்கு எல்லைப் பிரச்னையில் எந்த ஒரு சலுகையும் காட்டுவார் என்று நம்புவதற்கு இல்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.