/

அதிபரின் வெல்லும் சொல்: புதிய பொருளாதாரப் பாதையில் சீனா

சர்வதேச அரங்கில் ஆசியாவின் வளர்ச்சி மிக முக்கியமானதாக உற்று நோக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:42 pm

திருமலை சோமு

சர்வதேச அரங்கில் ஆசியாவின் வளர்ச்சி மிக முக்கியமானதாக உற்று நோக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது உள்ள சூழலில் உலக பொருளாதாரம் பல பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளது. பங்குச் சந்தைகள் கொந்தளிப்பாக உள்ளன.  உலக நாடுகளில் பொருளாதாரம்  பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான பரிமாற்றம் வழக்கமாக இருக்கும் வகையில், இந்த மோதலில் சீனா வெற்றி பெறுவதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் வெற்றி ஆசியாவின் பொருளாதார வெற்றியாக இருக்கும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் சீனாவில் 4 நாள் மாநாடாக நடைபெற்று வரும் போஆவ் ஆசிய மன்றத்தின் 2018ஆம் ஆண்டுக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். அதன்படி சீனாவில் வர்த்தக விதிமுறைகளை தளர்த்துவது, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் சூழலை ஏற்படுத்துவது, இறக்குமதி விரிவாக்கம், வளங்களை உறுதிப்படுத்தி, புத்தாக்கமான முறையில் எதிர்காலத்தில் தலைமையேற்று நிற்பது போன்ற விசயங்களை முன்னிறுத்தி பேசினார்.

இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் வெளிப்படை தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவதும், முதலீடு மற்றும் வர்த்தகத்தில் சுதந்திரமான போக்கை முன்னேற்றி பலதரப்பு வர்த்தக முறையை வளர்ப்பதே ஆசியாவின் வெற்றியை நிலைநாட்டும் என்று கூறினார். 

மேலும் சீனாவில் இந்த ஆண்டு இறக்குமதியை விரிவுபடுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள இருப்பதாகவும், மக்களுக்கு தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக "கடுமையாக உழைக்க உறுதிபூண்டிருப்பதாகவும் கூறினார்.

சர்வதேச வர்த்தக விதிகளுடன் இணைவதை பலப்படுத்தி, வெளிப்படைத் தன்மையை அதிகரித்து, சொத்துரிமைக் காப்பை வலுப்படுத்தி, போட்டியை ஊக்குவித்து, ஏகபோகத்தை எதிர்க்கும் விதமாக, சீனா முயற்சி எடுக்கும். இவ்வாண்டின் முற்பாதியில், வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதற்கு ஏற்றவாறான சட்ட திருத்தத்தை சீனா நிறைவேற்றும் என்று ஜிஜின்பிங் கூறினார்.

அமெரிக்காவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்புகளில் ஏற்படும் இழப்புகளை சரி செய்வதற்கான முயற்சியில் சீனா இறங்கி இருப்பதோடு சீனாவின் இந்த அதிரடி முன்னெடுப்பு ஆசிய பங்குச்சந்தைகளில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சீனாவை தனது  "பொருளாதார எதிரி" என அமெரிக்க அதிபர் டிரம்ப்  கூறியுள்ள நிலையில், பொருளாதார உலகமயமாக்கத்துக்குப் பொருந்திய மிகப் பரந்தத் தன்மை வாய்ந்த சர்வதேச ஒத்துழைப்பு மேடையாக பல்வேறு தரப்புகளை உருவாக்க வேண்டும் என்று சீன அரசு முன்வந்திருப்பது ஆசிய வளர்ச்சிக்கு வழிகோலும் என்றும் இது வரவேற்க தகுந்த ஒன்று என்றும் விமர்சகர்கள் மத்தியில் கூறப்படுகிறது. 

கூட்டுக் கலந்தாய்வு,  கூட்டுக் கட்டுமானம், கூட்டுப் பகிர்வு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு முன் சீனா, ஒரு மண்டலம் - ஒரு பாதை என்ற முன்மொழிவு வைக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை, 80- க்கும் மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள், சீனாவுடன் ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் மிகப்பெரிய சக்திகளாக வளர்ந்து வரும் இந்தியாவும் சீனாவும் கூட்டு ஒத்துழைப்புடன், திறந்த மனதுடன் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பட்சத்தில் ஆசியா உலக அரங்கில் தனக்கான பாதையை வகுத்து, பெரும் வளர்ச்சியை எட்டி, வெற்றிக் கொடி நாட்டும் என நம்பலாம். அதை நோக்கியே சீன அதிபரின் சொல்லும் செயலும் இருப்பதை இந்த போஆவ் மாநாட்டு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.