/

தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை, நலத்திட்டங்கள் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் ஆய்வு

புதுச்சேரி மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை மற்றும் நலத்திட்டங்கள் நிலை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:45 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை மற்றும் நலத்திட்டங்கள் நிலை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டம் புதுவை தலைமை செயலகத்தில். ஆணைய துணை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். அரசு செயலர் மிகிர்வரதன், மாவட்ட ஆட்சியர் வல்லவன், டிஜிபி சுனில்குமார் கவுதம், சீனியர் எஸ்பிக்கள் ராஜீவ்ரஞ்சன், அபூர்வா குப்தா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ரகுநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கிய சிறிய நேரத்திலேயே அங்கு வந்த பல்வேறு ஆதிதிராவிட அமைப்பு நிர்வாகிகள் தங்களுடைய குறைகளை கேட்டபின்னர், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யுமாறு வலியுறுத்தினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் விசிக முதன்மை செயலர் தேவ.பொழிலன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் உட்பட பலர் தங்களது குறைகளை தெரிவித்தனர்.

புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டோர் துணை திட்ட நிதியை அரசு முறையாக செலவிடவில்லை. 70 சதவீத நிதியை வேறு துறைக்கு செலவிடுகின்றனர். எனவே,
நிதித்துறை செயலரை மாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டோருக்கான நிதியை முழுமையாக அவர்களுக்கே செலவிட வேண்டும்.

தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை இலவச கல்வி அளிக்க சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான கோப்பு ஆளுநருக்கு
அனுப்பப்பட்டது. அதற்கு சில விளக்கங்கள் கேட்டு கோப்பை திரும்பி அனுப்பிவிட்டார். இதற்கு அனுமதி பெற்று தர வேண்டும்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தலித் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில்லை. தலித் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கு இடையே நடைபெறும் பிரச்னைகளை திருத்தியமைக்கப்பட்ட வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்வதில்லை.

கீழ்சாத்தமங்கலம், சந்தை புதுக்குப்பம், பிள்ளையார்குப்பம், ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சாதி கலவரங்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை
எடுக்கப்படவில்லை.

மலகுறவர், காட்டு நாயக்கன், குருமன், எரகுலா இனங்களை அட்டவணை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இருளர் இனத்தவரை சிறப்புதிட்ட அடிப்படையில் விரைவாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப்பட்டா
கூடிய தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும். கொத்தடிமைகளாக மீட்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் மறுவாழ்வுக்கான நலத்திட்ட உதவிகளை புதுவை அரசு செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஆணைய துணை தலைவர் முருகன் உறுதியளித்தார். அதன்பின்னர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.