/

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டம்: 214 பேர் கைது

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:36 am

எஸ். பாண்டியன்

காலமுறை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 43 பெண்கள் உள்பட 214 பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர்கள் ஆர்.ராமசாமி, எம்.உதயசூரியன், எ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் எம்.அசோகன் விளக்கவுரை நிகழ்த்தி மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில், மாநில அளவிலான கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் மேல்நிலை நீர் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், ஊராட்சி செயலாளர், வரி வசூல் செய்பவர், மேற்பார்வையாளர் ஆகியோரை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும் மற்றும் உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுத்தல் உள்பட பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூலக்கரை போலீஸார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 43 பெண்கள் உள்பட 214 பேரை கைது செய்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.