/

ஆய்வக உதவியாளர் பணியிடம்:விருதுநகர் மாவட்டத்தில் 41556 பேர் விண்ணப்பித்துள்ளனர்

விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 41556 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கான தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:14 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 41556 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கான தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை மேலும் அவர் கூறியாதவது: இம்மாவட்டத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள 154 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு குறைந்தபட்சம் பள்ளி இறுதி வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் தேர்வதற்கான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.   கடந்த 24-ம் தேதி முதல், தொடர்ந்து மே 6-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் மொத்தம் 41556 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  

இம்மாதம் 31-ம் தேதி இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு 74 மையங்களில் நடைபெற இருக்கிறது. இதில், 150 மதிப்பெண்களுக்கேற்ப 120 அறிவியல் வினாக்களும், 30 பொது அறிவு வினாக்களும் கேட்கப்படும்.

மேலும், நேர்முகத் தேர்வில் கூடுதல் தகுதிக்கு பிளஸ்2-2, பட்டம் பெற்றிருந்தால்-5, சரியான முறையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு-10, அனுபவம் பெற்றிருந்தால்-2, நேர்முகத் தேர்வில் அதிகாரிகள் குழு முன் அளிக்கும் பதில்களுக்கு-6 என மொத்தம் 25 மதிப்பெண்களும் அளிக்கப்பட இருக்கிறது. இப்பணியிடம் அனைத்தும் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் நியமனம் செய்யப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.