/

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் மணல் கொள்ளையர்களால் கொலைகள் தடுக்க கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் நகர செயலர் பாஸ்கரன் கடந்த பிப். 22ம்தேதி கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூற அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:11 am

கவிதன்

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடந்த தொடர் கொலைகள் நடக்க காரணமான மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் நகர செயலர் பாஸ்கரன் கடந்த பிப். 22ம்தேதி கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூற அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்ரீவைகுண்டம் வர திட்டமிட்டார். ஆனால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மார்ச் 9ம் தேதி வரைய 144 தடை உத்தரவு பிறபித்தார். இதையொட்டி  ஸ்ரீவைகுண்டத்திற்கு கிருஷ்ணசாமி வந்து செல்ல போலீஸார் தடை விதித்தனர். இடைதொடர்ந்து, மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2ம் தேதி) ஸ்ரீவைகுண்டம் வந்து செல்ல கிருஷ்ணசாமி அனுமதி பெற்றார். இதையொட்டி ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்பிக்கள் நெல்லை நரேந்திரன்நாயர் தூத்துக்குடி துரை, திண்டுக்கல் எஸ்.பி. ஆகியோர் தலைமையில் ஏடிஎஸ்பிக்கள் கந்தசாமி, இளங்கோ, ஏஎஸ்பி அருண்சக்திகுமார், சீனிவாசன், டிஎஸ்பிக்கள் ஸ்ரீவைகுண்டம் விஜயகுமார், சசிமோகன் மற்றும் 19  ஆய்வாளர்கள், 63  உதவி -ஆய்வாளர்கள், அதிரடிபடை போலீஸார் 60 பேர், சிறப்பு போலீஸ் படையினர் 122 பேர் மற்றும் உள்ளூர் போலீஸார் 295 பேர் உட்பட சுமார் 600 பேர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 11.40 மணிக்கு கிருஷ்ணசாமி ஸ்ரீவைகுண்டம் வந்தார். பின்னர் பிச்சனார் தோப்பில் உள்ள பாஸ்கரனின் வீட்டிற்கு சென்ற கிருஷ்ணசாமி, அவரது பெற்றோர்கள் மாரிமுத்து, கச்சியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், நிருபர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது,

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் சைக்கிள், வேன் மற்றும் டிராக்டர்களில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இங்கு, மணல் கொள்ளையர்கள் அதிகமாக இருப்பதால் தான் அதிகமான கொலைகள் நடக்கின்றன. கால்வாய், மூலக்கரை, பக்கப்பட்டி ஆகிய கிராமங்களில் நடந்த கொலைகளை அடுத்து தற்போது பாஸ்கரன் கொலை செய்யப்பட்டுள்ளார்.தாழ்த்தப்பட்டவர்கள் தான் அதிகமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.  இந்த  கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை தனி புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.  ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாக புகார் வந்துள்ளது. நேர்மையான போலீஸாரை நியமித்து தடுக்க  வேண்டும். மணல் கொள்ளைக்கு ஆதரவாக காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் செயல்பட்டு வருவதாகவும் புகார் வந்துள்ளது.  பிச்சனார் தோப்பு என்று அழைக்கப்படும் இப்பகுதியில் 40 வீடுகள் தான் உள்ளன. ஆனால் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

ஒரே வீட்டில் பல குடும்பத்தினர் இட நெருக்கடியில் வாழ்கின்றனர். எனவே, பக்கத்தில் ஒரு காலியிடத்தில் இலவசமாக வீட்டு மனைகளை வருவாய் துறையினர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதிக்கு தனியாக பொது சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். அரசியல் சாசனப்படி தனிப்பட்ட நபர்களுக்கு கிடைக்கக் கூடிய அடிப்படை உரிமைகள் கூட பிச்சனார் தோப்பு மக்களுக்கு கிடைக்கவில்லை.  இதுகுறித்து அவர்கள் என்னிடம் மனு கொடுத்துள்ளனர். நான் சட்டபேரவையில் குரல் கொடுப்பேன் என்றார் அவர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணசாமி புறப்பட்டு சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.