அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில்,தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்ற தேமுதிக-வைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்எல்ஏ ஆர்.அருள்செல்வன் செவ்வாய்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையை நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனையைாக தரம் உயர்த்தவேண்டும்,புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் மற்றும் புறவாழிச்சாலை பணிகளை உடனடியாக துவங்கவேண்டும். மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டம் உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரும் வரை ஜனவரி20 முதல் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக எம்எல்ஏ ஆர்.அருள்செல்வன்அறிவிப்பு செய்து,செவ்வாய்கிழமை காலை கிட்டப்பா அங்காடி முன்பு உண்ணாவிரதத்தைத் துவங்கினார்.
அந்த இடத்தில் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,தனது கட்சியினருடன் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றதால் ஆர்.அருள்செல்வனை பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது நடவடிக்கையையைக் கண்டித்து கட்சித் தொண்டர்கள் முழக்கமிட்டனர்.