விருதுநகர் மாவட்டத்தில் சமூக பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு தகவல்கள் அடங்கிய வரைவு பட்டியல் உள்ளாட்சி அமைப்பு மற்றும் பொது இடங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு (திங்கள்கிழமை) வெளியிடப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2011 சமூக பொருளாதார மற்றும் சாதிக்கணக்கெடுப்பு தகவல்கள் அடங்கிய வரைவு பட்டியல் ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது.
எனவே வரைவு வெளியீட்டில் உள்ள தகவலுக்கு எதிரான மறுப்புகளை படிவம் எ யிலும், திருத்தங்கள் மற்றும் மாறுதல்களை படிவம் பி யிலும், விடுபட்ட குடும்பங்களின் பெயர்களை சேர்க்க படிவம் சி யிலும் அதற்கான விண்ணப்பங்களை ஊரக பகுதிகளில் ஊராட்சி அளவில் நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடமும், நகர் பகுதிகளில் வார்டு அளவில் நியமிக்கப்பட்ட அலுவலரிடம் வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து மே-17ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், குறிப்பிட்ட படிவத்தில் இல்லாத விண்ணப்பங்கள், கையெழுத்து மற்றும் கைரேகை இல்லாத, முழுமையாக நிரப்பப்படாத, மொத்தமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.