வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

விருதுநகரில் இடிந்து விழும் நிலையில் புதுப்பேருந்து நிலையம்  சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

விருதுநகர் நகராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள  புதுப்பேருந்து நிலையத்தை சீரமைக்கவும், அனைத்து பேருந்துகளும் வந்து செல்லவும் நடவடிக்கை வேண்டும் என

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:12 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் நகராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள  புதுப்பேருந்து நிலையத்தை சீரமைக்கவும், அனைத்து பேருந்துகளும் வந்து செல்லவும் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரி்ககை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தின் தலைநகராக இருந்து வருவதால், சுற்றுப்பகுதி கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு பல்வேறு வழித்தடங்களில் நகராட்சி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே இப்பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட அளவு பேருந்துகளுக்கு மேல் நிற்க முடியாத அளவிற்கு இடநெருக்கடி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் நகருக்குள் போக்குவரத்து வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதோடு, அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலையும் இருந்து வந்தது.

இதுபோன்ற நெருக்கடியை தவிர்க்கும் வகையில் அனைத்து வசதியுடன் கூடிய புதுப்பேருந்து நிலையம் விருதுநகர்-சாத்தூர் சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இப்பேருந்து நிலையம் தொடங்கி சில மாதங்கள் முழுமையாக இயங்கியது. அதையடுத்து, இந்த வழித்தடங்களில் செல்லும் பேருந்தும் அனைத்தும் பேருந்து நிலையத்திற்குள் வராமலே புறவழிச்சாலையிலேயே சென்று வந்தன. இதனால், பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்காக குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் நின்றால் தான் பேருந்து ஏற முடியும் என்கிற சூழ்நிலையிருக்கிறது.

அதிலும், மதுரையில் இருந்து இவ்வழியாக செல்லும் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஒரு சில பேருந்துகளை தவிர்த்து மற்ற பேருந்துகள் நிலையத்திற்குள் வராமலேயே புறவழிச்சாலையிலேயே செல்கிறது. இதுபோன்ற காரணங்களால் அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் கருமாதி மடம் போன்ற பேருந்து நிறுத்தங்களில் நின்று பேருந்து ஏறிச் செல்ல வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் சுற்றுச்சுவர் உள்ளிட்ட கட்டடப்பகுதிகள் இடிந்து சேதமடைந்துள்ளது. அதேபோல், பேருந்துகள் நிற்கும் பகுதியில் மேல் பகுதியிலிருந்து பெயர்ந்து இடிந்து விழுந்து வருகிறது. எனவே இந்நிலையத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையில் சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.